உலகளாவிய ஊழல் சாம்பியன் சத்தீஸ்கர் பாஜக அரசுதான்: ராகுல் காந்தி தாக்கு
சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் ஆளும் பாரதிய ஜனதா அரசு எதுவுமே செய்யவில்லை. காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் படேலை கொலை செய்தால் மட்டுமே அவர் முதல்வராவதை தடுக்க முடியும் என்று கருதியதாலேயே கொலை செய்திருக்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகாலமாக சத்தீஸ்கர் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல பாரதிய ஜனதா அரசு தவறிவிட்டது. சத்தீஸ்கர் மாநில பாரதிய ஜனதா அரசுதான் உலகளாவிய ஊழல் சாம்பியனாக இருக்கிறது. ஊழலுக்கு எதிராக தகவல் அறியும் உரிமை சட்டம் என்ற ஆயுதத்தை பயன்படுத்துங்கள்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏழைகளின் நிலங்கள் பறிக்கப்பட்டு தொழிலதிபர்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது. இதைத் தடுக்கவே நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
ஒட்டுமொத்த நாடும் பலனடையவே உணவு பாதுகாப்பு மசோதாவை கொண்டு வந்தோம். காங்கிரஸ் கட்சியானது சாமானியர்களுக்கானது- ஏழைகளுக்கானது- ஆதிவாசிகளுக்கான கட்சி. ஆனால் பாரதிய ஜனதாவோ உங்களிடம் இருந்து நிலங்களை பறிக்கிறது.
இவ்வ்வாறு சத்தீஸ்கரில் ராகுல்காந்தி பேசினார்.