"சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை.." தந்தை மீதான வழக்குப்பதிவுக்கு.. சத்தீஸ்கர் முதல்வரின் பளிச் பதில்
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், "சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை" என சத்தீஸ்கர் முதல்வர் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்போது முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு பாஜக எதிர்க்கட்சியாக உள்ளது.
இந்நிலையில், நேற்றிரவு சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலின் தந்தை நந்த்குமார் பாகல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சர்ச்சை கருத்து
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் பூபேஷ் பாகேலின் தந்தை நந்த்குமார் பாகல் பிராமணர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் சிலவற்றைத் தெரிவித்திருந்தார். அதாவது அவர் பேசும்போது, "பிராமணர்கள் உங்கள் கிராமங்களுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டாம் என்று நான் இந்தியாவின் அனைத்து கிராம மக்களிடமும் வலியுறுத்துகிறேன். நாம் புறக்கணிக்க வேண்டும். இது குறித்து எல்லா சமூகத்தினருடனும் பேசுவேன். அவர்கள் வந்த வழியே வால்கா நதி வழியே திருப்பி செல்ல வேண்டும்" என தெரிவித்ததிருந்தார்.

வழக்குப்பதிவு
பிராமணர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற ரீதியில் பூபேஷ் பாகேலின் தந்தை பேசியது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. மேலும் இது தொடர்பாக சர்வ் பிராமண சமாஜ் என்ற அமைப்பு அளித்த புகாரின் அடிப்படையில் நேற்று இரவு நந்த்குமார் பாகல் மீது இரு வேறு சமூகத்திற்கு இடையே மோதலை தூண்டுவது உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முதல்வரின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது பெரும் சர்ச்சையானது.

சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், "இங்குச் சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை, அது 86 வயதாகும் எனது தந்தையாக இருந்தாலும் சரி, அவருக்கும் அதே சட்டம் தான். சத்தீஸ்கர் அரசு அனைத்து மதம், சாதி, சமூகங்களின் உணர்வுகளை மதிக்கிறது. குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக எனது தந்தை நந்த்குமார் பாகேல் தெரிவித்த கருத்து சமூக அமைதியைச் சீர்குலைத்துள்ளது.

முதல்வராக மன்னிக்க முடியாது
அவரது பேச்சுக்கு நானும் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் இருவருக்கும் அரசியல் மற்றும் நம்பிக்கைகள் உள்ளிட்டவற்றில் மாற்றுக்கருத்துகள் உள்ளன. ஒரு மகனாக, நான் அவரை மதிக்கிறேன். ஆனால் முதலமைச்சராக, சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலான அவரது பேச்சை என்னால் மன்னிக்க முடியாது," என்றார்.

சத்தீஸ்கர்
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு கடைசியாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் 68 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்திருந்தது. சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டதில் இருந்து சுமார் 15 ஆண்டுகளாக பாஜகவே தொடர்ந்து ஆட்சியில் இருந்த நிலையில், முதல்முறையாக அக்கட்சியைக் காங்கிரஸ் வீழ்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications