27 ஆண்டுகளுக்கு முன் கர்நாடக முதல்வர் சித்தராமையா பிடித்த கடைசி சிகரெட்
பெங்களூர்: கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் வாழ்க்கையில் ஒருநாள் மறக்கமுடியாத நாளாக அமைந்துவிட்டதாம். 1987 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17தான் அந்த நாள். காரணம் அன்றைய தினத்தில்தான் அவர் சிகரெட் புகைப்பதை விட்ட தினமாம்.
நீண்ட நாள் வாழும் ஆசையினால் 27 ஆண்டுகளுக்கு முன்பே புகைப் பழக்கத்தை நிறுத்திவிட்டேன் என்று கூறியுள்ளார் சித்தராமையா.
பெங்களூரு விதான் சவுதாவில் புகையிலை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள், அதனை தடுப்பதற்காக அரசு எடுத்துவரும் நடவடிக்கை குறித்த அறிக்கையை வெளிட்டு கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசினார்.

அப்போது, ''மாநில அரசு புகையிலை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக ஆண்டுதோறும் அரசு ரூ.93 கோடி செலவிடுகிறது. புகையிலையால் பாதிக்கப்படுவர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால், அரசுக்கு கடுமையான நிதிச்சுமை ஏற்பட்டுள்ளபோதும், புகைப்பதை தடுக்க வேண்டும் என்பதில் அரசு திடமாக உள்ளது. மாநிலத்தில் குட்கா விற்பனையை முழுவதுமாக தடை செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
புகையிலை விற்பனைக்கு அதிக வரி போட ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் மக்கள் புகைப்பதையும், புகையிலையை உபயோகிப்பதையும் முழுவதுமாக நிறுத்தி, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.
என்னுடைய இளம் வயதுகளில் புகை பிடிக்கும் பழக்கத்தை நான் கொண்டிருந்தேன். அமைச்சரான பின்பும் நான் புகை பிடிக்கும் பழக்கத்தை விடவில்லை. ஆனால், நீண்ட நாள் வாழும் ஆசையில் புகைப் பிடிப்பதை கடந்த 1987 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதியன்று விட்டுவிட்டேன். எனது வாழ்க்கையில் நடந்த நல்ல காரியங்களில் ஒன்றாக அதை கூறுவேன்." என்று கூறினார் சித்தராமையா.












Click it and Unblock the Notifications