ஈழத் தமிழர்களுக்கு செய்ததைப் பாரீர்... பாரீர்.. பத்திரிக்கை விளம்பரம் கொடுத்த மத்திய அரசு
டெல்லி: காமன்வெல்த் மாநாடு தொடர்பாக தமிழகத்தில் காங்கிரஸுக்கும், மத்திய அரசுக்கும் எதிராக மக்கள் மன நிலை கிளர்ந்து எழுந்துள்ள நிலையில், அதைத் தணிக்கும் வகையில் மத்திய அரசு பத்திரிக்கைளின் உதவியை நாடியுள்ளது.
வட மாநில பத்திரிக்கைகளில் முழு பக்க அளவுக்கு ஈழத் தமிழர்களுக்கு மத்திய அரசு என்னென்ன செய்துள்ளது என்பதை அதில் பட்டியலிட்டுள்ளனர்.
போர் பாதித்த வடக்கு இலங்கையில் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த நிவாரணம், மறு சீரமைப்பு நடவடிக்கைகள் அதில் விளக்கிக் கூறப்பட்டுள்ளன.

2009 முதல்
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அந்த விளம்பரத்தில் 2009ம் ஆண்டு முதல் இலங்கையில் தமிழ் மக்களுக்கு இந்தியா செய்த உதவித் திட்டங்கள் என்று தலைப்பிட்டு வரிசையாக சொல்லியுள்ளனர்.

வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஏற்பாடு
மத்திய வெளியுறவுத்துறையின் ஏற்பாட்டில் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது.

உதவி நிவாரணங்களை உடனே அனுப்பினோம்
அதில், 30 ஆண்டு கால போர் முடிவுக்கு வரும் முன்பே பாதிக்கபபட்டு இடம் பெயர்ந்து அவல நிலையில் இருந்த தமிழ் மக்களுக்கு இந்திய அரசு உதவிப் பொருட்களையும் நிவாரணங்களையும் அனுப்பியதாக கூறப்பட்டுள்ளது.

குர்ஷித் படம் போட்டு
அந்த விளம்பரத்தில் சல்மான் குர்ஷித், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ஆகியோர் சந்தித்தபோது எடுத்த படத்தையும் இணைத்துதள்ளனர்.

அனைத்துப் பிரிவினரும் மகிழச்சியில்
அதில், இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று பொருளாதாரம், வீட்டு வசதி, அடிப்படைக் கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்வளம், தொழில் கலாச்சாரம், விளையாட்டு அனைத்துப் பிரிவுகளிலும் மக்கள் ஸ்திரமான நிலையைக் கண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ரூ. 577 கோடியில் திட்டம்
இந்திய அரசு கடந்த 2009ம் ஆண்டு முதல் ரூ. 577 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாகவும், மேலும் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ. 1300 கோடி அளவுக்கு செலவிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே திட்டத்துக்காக ரூ. 4000 கோடி
மேலும், வடக்கு ரயில்வேத் திட்டத்திற்காக இந்தியா ரூ. 4000 கோடி அளவுக்கு கடன் வழங்க உறுதி பூண்டுள்ளதாகவும், அதில், ரூ. 1685 கோடி ஏற்கனவே செலவிடப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications