பள்ளி மாணவர்களுக்கு ”பகவத்கீதை” பாடம் – ஹரியானா அரசு முடிவு
குர்கான்: பள்ளி மாணவர்களுக்கு பகவத் கீதையில் இருந்து பாடங்களை தொகுத்தளிக்க ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது.
ஹரியானா மாநிலம் குர்கானில் அமைந்துள்ள அரசு பெண்கள் கல்லூரியில் நடந்த விழாவில் மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்துவைத்தார். பின்னர் மாணவிகளிடையே அவர் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர், "மாணவர்கள் ஒழுக்க நெறிகளை வளர்த்துக்கொள்வதற்காக பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தில் பகவத் கீதை மற்றும் பிற புனித நூல்களில் இருந்து பாடங்கள் சேர்க்கப்படும். மேலும் குர்கானில் பல்கலைக்கழகம் ஒன்றும் நிறுவப்படும்" என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், மாநிலத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தொடர்பான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, மகளிர் மேம்பாட்டுக்கான திட்டங்கள் வகுக்கப்படும் என்றும், மாநிலத்தில் தற்போது உள்ள 44 சதவீத பெண் கல்வி வளர்ச்சி 100 சதவீதமாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.