காவிரி விவகாரத்தில் கர்நாடகாவின் காவல்காரன் நான்: கர்நாடக உதய நாளில் சித்தராமையா சூளுரை
பெங்களூர்: நவம்பர் 1ம் தேதி என்பது மொழி வாரி மாநிலங்கள் பிரிந்த தினம். தமிழகத்தில் இதை பெரிதாக கண்டுகொள்வதில்லை. ஆனால் கர்நாடகாவில், ராஜ்யோத்சவா என்ற பெயரில் பிரமாண்டமாக கொண்டாடி மகிழ்கிறார்கள். சுதந்திர தினத்தைவிட ஒருபடி அதிகமாக அங்கு கொண்டாட்டங்கள் இருக்கின்றன.
ராஜ்யோத்சவாவை முன்னிட்டு கர்நாடக மக்களுக்கு முதல்வர் சித்தராமையா, தூர்தர்ஷனின் கன்னட சேனலான சந்தனா டிவியில், வாழ்த்து தெரிவித்து நேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் காவிரி விஷயம் குறித்தும் பேச தவறவில்லை. அவர் கூறுகையில், நிலம், நீர், மொழி பிரச்சினைகளில் கர்நாடகாவிற்கு எப்போதும் நிரந்தரமாக அநீதி இழைக்கப்பட்டு வருகிறது என்ற மனோபாவம் கன்னடர்கள் மத்தியில் எப்போதுமே உள்ளது. காவிரி பிரச்சினையிலும் இத்தகைய எண்ணம் வெளிப்பட்டுள்ளது. கர்நாடகாவில், தொடர்ந்து 2வது ஆண்டாக வறட்சி ஏற்பட்டுள்ளதால் வெளிப்படும் விவசாயிகளின் இயலாமை கோபத்தை புரிந்துகொள்ள முடிகிறது.
அநீதிக்கு உள்ளானவர்கள் போராட்டங்கள் நடத்த உரிமை உள்ளது. ஆனால், கூட்டாட்சி நடைமுறையை ஏற்றுக்கொண்ட நாம் அதற்கு மரியாதை கொடுத்தபடியே, நமக்கு ஏற்படும் அநீதிகளுக்கு எதிராக போராட வேண்டும். நாம் பொறுமையை இழக்கக்கூடாது. நமது தலையை நாமே சுவற்றில் இடித்து கொள்ளக்கூடாது.
நிலம், நீர், மொழியை பாதுகாக்கும் பணியை நான் தொடர்ந்து மேற்கொள்வேன். ஒரு காவல்காரரை போல இந்த வேலையை செய்வேன். காவிரி நதி நீர் பிரச்சினையில் கோர்ட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் கர்நாடகாவின் போராட்டம் தொடரும். இந்த விஷயத்தில் எங்கள் அரசு முழு ஈடுபாட்டுடன் செயல்படுகிறது. மாநிலத்தின் நலனை காக்க அரசு தயாராக உள்ளது என்றார்.