ஏய் மிஸ்டர்..அரெஸ்ட் வாரண்ட் வாங்கிட்டுவா....போலீசாரை நடுநடுங்க வைத்த பிரியங்கா கர்ஜனை- வைரல் வீடியோ
லக்கிம்பூர்: உ.பி.யில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்ட லக்கிம்பூர் கேரி மாவட்டத்துக்கு செல்ல முயன்ற போது காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அதிகாலையில் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது போலீசாரிடம் பிரியங்கா காந்தி உரத்த குரலில் இடைவிடாமல் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்திய பா.ஜ.க.அரசின் 3 புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக 10 மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் விவசாயிகளுடன் உ.பி. மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்ட விவசாயிகளும் பங்கேற்றுள்ளனர்.
கேரி மாவட்டம் பன்வீர்பூர்தான் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் சொந்த ஊர். இங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் உ.பி. மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பாஜக தலைவர்களுக்கு கறுப்புக் கொடி காட்டுவது என போராடும் விவசாயிகள் முடிவு செய்திருந்தனர்.
இது என்ன ஜோக்கா? அவரை உடனே தூக்குங்க.. ஆர்சிபி மேட்சில் நடந்த சம்பவம்.. கொதிக்கும் கிரிக்கெட் உலகம்
வன்முறையில் 8 பேர் உயிரிழப்பு
திட்டமிட்டபடி பாஜக தலைவர்கள் சென்ற கார்களை மறித்து விவசாயிகள் கறுப்புக் கொடி காட்டினர். அப்போது மத்திய இணை அமைச்சர் அஜஸ் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவின் கார் என கூறப்படும் வாகனம் மோதியதில் 2 விவசாயிகள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள் பாஜகவின் வாகனங்களை தடுத்து நிறுத்தி தாக்கினர். இந்த வன்முறை சம்பவங்களில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
லக்மிபூரில் பதற்றம்
இது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. உ.பி. வன்முறை சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, அஜஸ் மிஸ்ரா பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். லக்மிபூரில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால் அங்கு இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
போலீஸ் தடுத்து நிறுத்தியதால் பிரியங்கா ஆவேசம்
இந்நிலையில் லக்மிபூர் கேரிக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தமது ஆதரவாளர்களுடன் செல்ல முயன்றார். ஆனால் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதைக் காரணம் காட்டி பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தினர். பன்வீர்பூர் கிராம எல்லையில் அதிகாலையில் பிரியங்கா காந்தியை தடுத்து நிறுத்தினர் போலீசார். அப்போது காங்கிரஸ் நிர்வாகி ஒருவரை போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றினர். அதேபோல் பிரியங்கா காந்தியையும் பெண் போலீசார் பிடித்து இழுத்தனர். இதனால் ஆவேசமடைந்தார் பிரியங்கா.. அப்போது உரத்த குரலில் போலீசாருக்கு பிரியங்கா காந்தி எச்சரிக்கை விடுத்தார். மேலும், ஜீப்பில் வலுக்கட்டாயமாக இப்படி ஏற்றுவது என்பது கடத்திச் செல்வது.. உங்களுக்கு தைரியம் இருந்தால் அரெஸ்ட் வாரண்ட் வாங்கிட்டு வந்து கைது செய்யனும்.. அதைவிட்டுட்டு இப்படி எல்லாம் செய்தால் அதுக்கு பேர் கடத்தல்; அதுக்கு பேர் பாலியல் சீண்டல்; அதுக்கு பேர் தாக்குதல்.. எங்க முடிஞ்சா கை வைத்து பாருங்க என்னை எப்படி வலுக்கட்டாயமாக இழுத்துப் போகமுடியும்? அதுக்கு ரைட்ஸ் இருக்கா? என உரத்த குரலில் பிரியங்கா கர்ஜித்தார். இதனையடுத்து போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பிரியங்கா காந்தியின் இந்த ஆவேச வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காங். போராட்டம்
இதனிடையே பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள், பிரியங்கா காந்தி தடுக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே லக்கிம்பூர் செல்வதற்காக சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் உ.பி. சென்றார். ஆனால் லக்னோவில் அவரது விமானத்தை தரை இறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.