பிரதமரின் குஜராத் வருகையால் தேர்தல் தேதி அறிவிப்பு நிறுத்தி வைப்பு - காங்கிரஸ் குற்றச்சாட்டு
பிரதமர் நரேந்திர மோடியின் குஜராத் வருகையை ஒட்டியே தேர்தல் தேதி அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லி : பாஜக குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட விடாமல் தேர்தல் ஆணையத்திற்கு அழுத்தம் தருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநில சட்டசபைக்கான காலக்கெடு 2018, ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது. எனவே இந்த 2 மாநிலங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இமாச்சல பிரதேச மாநில தேர்தலுக்கான தேதியை மட்டும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
நவம்பர் 9ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு டிசம்பர் 18 தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று தேலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி அறிவித்தார். மேலும் குஜராத் தேர்தலுக்கான தேதி திங்கட்கிழமை அதாவது அக்டோபர் 16ம் தேதி அறிவிக்கப்படும் என்றார்.
இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. எனவே புதிய அறிவிப்புகள் எதையும் அங்கு வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏன் அறிவிக்கவில்லை?
இந்நிலையில் குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் ஆட்சிக்காலம் முடியும் நிலையில், குஜராத் தேர்தல் தேதியை மட்டும் அறிவிக்காததில் உள்நோக்கம் இருப்பதாக காங்கிரஸ் கட்சியை சேர்நத் ரன்தீப் சிங் சர்ஜ்வாலே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்திற்கு அழுத்தம்
ஏனெனில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் அங்கு புதிய அறிவிப்புகளை வெளியிட முடியாது. அக்டோபர் 16ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் பேரணியில் பங்கேற்கிறார். அப்போது புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று தெரிகிறது. எனவே அந்த நிகழ்ச்சிக்காகவே பாஜக தேர்தல் ஆணையத்திற்கு அழுத்தம் தந்து தேர்தல் அறிவிப்பு தேதியை நிறுத்தி வைத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மோடி வெளியிடப்போகும் அறிவிப்புகள்
22 ஆண்டுகளாக குஜராத்தில் ஆட்சியில் உள்ள பாஜகவிற்கு இந்தத் தேர்தல் சவாலானதாக இருக்கும் என்று காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது. இதனாலேயே 22 ஆண்டுகளாக நிறைவேற்றாத திட்டங்களை அறிவிப்புகளாக வெளியிட மோடி திங்கட்கிழமை குஜராத் செல்கிறார் என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்திற்கே அழுத்தமா?
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் பிரதமர் குஜராத் சென்றால் அது தேர்தல் பிரச்சாரமாகிவிடும். தேர்தல் ஆணையம் போன்ற தனி அதிகாரம் கொண்ட அமைப்பு ஆளும் கட்சியின் அழுத்தத்திற்கு உட்பட்டு செயல்படுவதை ஏற்க முடியாது என்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
துரதிஷ்டவசமானது
காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் சுதன்சு திரிவேதி, சிறிய அரசியல் கட்சி இது போன்றதொரு குற்றச்சாட்டை வைத்தால் அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவு தான் என்று விட்டுவிடலாம். ஆனால் நாட்டை ஆட்சி செய்த பழமையான மிகப்பெரிய கட்சியே இப்படி சொல்வது துரதிஷ்டவசமானது.
தேர்தல் ஆணையரே விளக்கம்
குஜராத் தேர்தல் தேதி ஏன் அறிவிக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையர் ஜோதியே தெரிவித்துவிட்டார். இமாச்சலில் குளிர் காலத்திற்கு முன்னர் தேர்தல் நடத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குஜராத்தில் வெள்ள நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால் அவை பாதிக்கப்படும் என்பதாலேயே தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்பதையும் விளக்கியுள்ளதாக திரிவேதி சுட்டிக்காட்டியுள்ளார்.