ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுப்பது காங்கிரஸ் மட்டும்தான்- சோனியா காந்தி
போபால்: ஊழல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருவது காங்கிரஸ் அரசு மட்டும்தான்; பாரதிய ஜனதாவோ ஊழல்வாதிகளைப் பாதுகாத்து வருகிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசினார்.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் மத்தியப் பிரதேச மாநிலம், ஜாபுவாவில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஊழலில் ஈடுபடுபவர்கள் மீது காங்கிரஸ் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. காங்கிரஸாரில் சிலர் கூட ஊழல் புகாரில் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால், ஊழலில் ஈடுபட்ட தங்கள் கட்சியினரை பாரதிய ஜனதா பாதுகாத்து வருகிறது.
பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் மத்தியப் பிரதேசத்துக்கு கடந்த 10 ஆண்டுகளில் பல கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
ஆனாலும், மத்தியப் பிரதேசத்தில் வறுமை தாண்டவமாடுகிறது. கடும் ஊட்டச்சத்து குறைபாடு, விவசாயிகள் தற்கொலை, விதைகளும், உரமும் விவசாயிகளுக்கு கிடைக்காதது போன்ற எண்ணற்ற பிரச்னைகளை மாநிலம் சந்தித்துவருகிறது.
வளர்ச்சிப் பணிகளுக்காகவே மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. ஆனால், அதுபோன்ற பணிகள் நடைபெறவில்லை. வளர்ச்சிப் பணிகளுக்காகத்தான் நிதி ஒதுக்கப்படுகிறதே தவிர, சிலர் தங்கள் பைகளை நிரப்பிக் கொள்ள மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை," என்றார்.