கட்சி 'கஜானா'வை ரொப்புவதற்கு... "பகாசுர"த் திட்டம் தீட்டும் பணப் பற்றாக்குறை காங்கிரஸ்!
டெல்லி: கட்சி நிதியைப் பலப்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களைத் தீட்டியுள்ளது காங்கிரஸ் கட்சி. அதில் ஒன்றாக அதிக நிதி தரும் நிறுவனங்கள், தொழிலதிபர்கள் குறித்த பட்டியலைத் தயார் செய்யும்படி மாநிலத் தலைவர்களுக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தல் தோல்வி மூலம் பலத்த அடியைச் சந்தித்துள்ளது காங்கிரஸ் கட்சி. மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ், தற்போது எதிர்க்கட்சியாக இருப்பதால் அதன் நிதித் தேவை அதிகரித்துள்ளது. எனவே, கட்சியின் கஜானாவை கனமாக்க விதவிதமான திட்டங்களை அக்கட்சி தீட்டி வருகிறது.
ஏற்கனவே, கட்சியின் உறுப்பினர்களுக்கான ஆண்டுக் கட்டணத்தை ரூ. 250 ஆக காங்கிரஸ் உயர்த்தி விட்டது. இதேபோல், கட்சியின் பத்திரிக்கையான சந்தேஷிற்கான ஆண்டு சந்தாவையும் விலை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ஆண்டிற்கு அக்கட்சிக்கு கூடுதலாக ரூ. 750 கோடி கிடைக்கும்.
இந்நிலையில், கட்சியின் வளர்ச்சி நிதியாக பெரிய நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் வசூல் வேட்டை நடத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் இப்படிப்பட்டவர்கள் 200 முதல் 250 பேர் கொண்ட பட்டியலை அது சேகரித்துள்ளது.
மேலும் யார் யார் அதிக நன்கொடை அதாவது ஒரே கட்டமாக மிகப் பெரிய தொகையை லம்ப்பாக தருவார்கள் (ரூ. 50,000. 1 லட்சம் என) என்பது குறித்த விவரங்களைத் தயாரித்து அனுப்ப மாநிலத் தலைவர்களுக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத கட்சியின் மூத்தத் தலைவர் ஒருவர் கூறுகையில், ‘இது பாராட்டக் கூடிய திட்டம் தான். ஆனால், இதனை ஆளும் கட்சியாக இருந்த போதே காங்கிரஸ் செய்திருக்க வேண்டும். ஆனால், தற்போது காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உள்ள நிலையில், எதிர்பார்க்கும் அளவிற்கு நிதி திரட்ட முடியுமா என்பது சந்தேகமே' எனத் தெரிவித்துள்ளார்.
பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருவதால் இந்த நிதி திரட்டும் நடவடிக்கைக்கு கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், அவசரக் காரணம் ஒன்றும் இருப்பதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, தற்போது டெல்லியில் கட்சித் தலைமை அலுவலகம் செயல்பட்டு வரும் 24, அக்பர் ரோடு கட்டிடத்தின் ஒப்பந்தக்காலம் முடிந்து விட்டது. எனவே, கட்சி அலுவலகத்தைக் காலி செய்யும் படி நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.
இதனால், உடனடியாக ரோஸ் அவென்யூ பகுதியில் புதிய கட்டிடத்தைக் கட்ட வேண்டிய நிர்பந்தத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. எனவே, அதற்கான நிதிக்காகத் தான் இப்போது அவசர கதியில் நிதி திரட்டும் படலம் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.