அமைச்சரவையில் எத்தனை இடங்கள்... சபாநாயகர் பதவி யாருக்கு... டெல்லியில் தீர்வு காணும் குமாரசாமி
அமைச்சரவையில் எந்த துறை எந்த கட்சிக்கு என்பது குறித்து பேசி தீர்த்துக் கொள்ள இன்று டெல்லியில் சோனியாவை சந்திக்கிறார் குமாரசாமி.
Recommended Video
பெங்களூர்: அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி அதிகபட்ச இடங்களை கேட்டுள்ளது. அதுபோல் சபாநாயகர் பதவியை ஜேடிஎஸ் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கோருகிறது.
கர்நாடக முதல்வராக குமாரசாமி நாளை மறுதினம் பதவியேற்கவுள்ளார். ஆனால் இரு கட்சிகளுக்கும் அமைச்சரவையில் யாருக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து பேச்சு நடைபெற்று வருகிறது.
அதுபோல் 78 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் அமைச்சரவையில் தங்களுக்கு நிறைய இடங்களை ஒதுக்க வேண்டும் என்று கோருகிறது. துணை முதல்வர் மற்றும் சபாநாயகர் பதவிகளையும் காங்கிரஸே வைத்துக் கொள்ள பார்க்கிறது.
சபாநாயகர்
ஆனால் ஜேடிஎஸ்ஸோ துணை முதல்வர் பதவியை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் சபாநாயகர் பதவியை எங்களுக்கு தாருங்கள் என்கிறார்கள். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த டெல்லியில் சோனியா, ராகுல்காந்தியை குமாரசாமி சந்திக்கிறார்.
பேச்சுவார்த்தை
தற்போது வரை மொத்தம் முதல்வருடன் சேர்த்து கர்நாடகத்தில் 34 அமைச்சர் பதவி உள்ளது. இதில் காங்கிரஸுக்கு 20 துறைகளும், ஜேடிஎஸ் கட்சிக்கு 14 துறைகளும் பிரித்துக் கொள்ளப்படும் என தெரிகிறது. இதில் முக்கிய சில துறைகளை காங்கிரஸ் கோருகிறது.
துணை முதல்வர் பதவி யாருக்கு
இதுகுறித்து பெங்களூரில் தங்கள் கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்திய குமாரசாமி கூறுகையில், துணை முதல்வர் பதவி குறித்து முக்கிய முடிவு இன்று எடுக்கப்படும். காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசித்த பிறகு என்னுடன் நாளை மறுதினம் யாரெல்லாம் பதவியேற்பர் என்பதை நான் முடிவு செய்வேன் என்றார்.
குமாரசாமி மட்டும்
இதுகுறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் கே சி வேணுகோபால் கூறுகையில், புதன்கிழமை அன்று குமாரசாமி மட்டும பதவிப்பிரமாணம் செய்து கொள்வார். அடுத்த நாள் பெரும்பான்மையை நிரூபித்த பிறகு அமைச்சர்கள் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொள்வர் என்றார்.
என்ன நடக்கும்
காங்கிரஸ் - ஜேடிஎஸ் எம்எல்ஏக்களுக்கு ஆதரவு தெரிவித்த இரு சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும் என்பது குறித்தும் இன்று ஆலோசனை நடத்தப்படும். கர்நாடக அரில் இரு கட்சிகளுக்கும் சரிசமமான வாய்ப்பு ஏற்பட வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. முக்கிய அமைச்சர் பதவியை காங்கிரஸும், சபாநாயகர் பதவியை ஜேடிஎஸ்ஸும் கோருகிறது. என்ன நடக்கும் என்பதை இன்னும் ஓரிரு நாளில் தெரிந்து கொள்ளலாம்.