வதோத்ராவில் நரேந்திர மோடிக்கு எதிரான காங்கிரஸ் வேட்பாளர் மதுசூதன் மிஸ்திரி!
வதோத்ரா: நரேந்திர மோடி போட்டியிடும் வதோத்ரா தொகுதியில் அவரை எதிர்க்கும் காங்கிரஸ் வேட்பாளராக மதுசூதன் மிஸ்திரி அறிவிக்கப்பட்டுள்ளார்.
வரும் மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடுகிறார் பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி. அங்கு அவரை எதிர்த்து ஆத் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவால் போட்டியிடுகிறார்.
இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் வதோத்ரா மக்களவை தொகுதியிலும் போட்டியிடுகிறார் மோடி. இதையடுத்து, அங்கு மோடியை எதிர்த்து போட்டியிட நரேந்திர ராவத் என்பவரை வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
இந்நிலையில், மதுசூதன் மிஸ்திரியை புதிய வேட்பாளராக காங்கிரஸ் கட்சி நிறுத்தியுள்ளது.
இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் அஜய் மாக்கென் டெல்லியில் வெளியிட்டார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் அகில இந்திய காங்கிரசின் பொதுச் செயலாளர் பொறுப்பில் உள்ள மதுசூதன் மிஸ்திரி, மோடியை எதிர்த்து போட்டியிட காங்கிரஸ் அறிவித்துள்ள முதல் வேட்பாளர் ஆவார். மிஸ்திரி கடந்த 2004 மக்களவை தேர்தலில் குஜராத்தின் சபர்காந்தா தொகுதியிலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
மோடியை எதிர்த்து போட்டியிடுவது பற்றி செய்தியாளர்களிடம் மிஸ்திரி கூறும்போது, 'இந்த வாய்ப்புக்காகத்தான் நான் நீண்டகாலமாக காத்திருந்தேன். மோடியை எதிர்த்து போட்டியிட்டு வதோதராவில் அவரை தோற்கடிப்பேன். அதில் நான் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளேன்,' என்றார்.
ராகுல்காந்தி தலைமையிலான தேர்தல் ஒருங்கிணைப்பு கமிட்டியில் இடம்பெற்றுள்ளவர் மதுசூதன் மிஸ்திரி என்பது குறிப்பிடத்தக்கது.