கோவா, மணிப்பூரில் பாஜகவிற்கு ஆதரவாக ஆளுநர்கள்... ராஜ்ய சபாவில் காங்கிரஸ் எதிர்ப்பு முழக்கம்
கோவா மற்றும் மணிப்பூரில் பாஜக ஆட்சி அமையும் வகையில் அம்மாநில ஆளுநர்கள் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டி ராஜ்ய சபாவில் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
டெல்லி: கோவா மற்றும் மணிப்பூர் ஆளுநர்களின் மீது குற்றம்சாட்டி காங்கிரஸ் கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் ராஜ்ய சபா ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கியது.
அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் கோவாவிலும், மணிப்பூரிலும் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைப் பெற்றிருந்தாலும் பாஜக சிறிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை அமைத்திருக்கிறது. இதற்கு அம்மாநில ஆளுநர்கள் ஒரு சார்பாக நடந்து கொண்டதே இதற்கு காரணம் என்று கூறி ராஜ்ய சபாவில் இன்று காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் மூத்த தலைவரான திக் விஜய் சிங், இது குறித்து முதலில் ராஜ்ய சபாவில் பேசத் தொடங்கினார். அரசியல் சட்டத்திற்கு எதிராக கோவாவில் பாஜக ஆட்சி அமைத்ததாக அவர் குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்பிக்கள் தொடர் முழக்கங்களை எழுப்பினார்கள். மக்களால் தோற்கடிக்கப்பட்ட பாஜக, பணத்தை வைத்து ஆட்சியைப் பிடித்துள்ளது என்று காங்கிரஸ் எம்பிக்கள் கடுமையாக சாடினார்கள்.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் சபாநாயகர் அவையைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. இதனைத் தொடர்ந்து ராஜ்ய சபா கூட்டம் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் அவை கூடி நடைபெற்று வருகிறது.