3வது முறை ஆட்சி கோஷம் போய், 3வது அணிக்கு ஆதரவு தருவோம் என்கிறது காங்கிரஸ்!
டெல்லி: மூன்றாவது முறையாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்று அசராமல் கூறி வந்த காங்கிரஸ் தலைவர்கள் இப்போது பாஜக அல்லாத மூன்றாவது அணிக்கு ஆதரவு தருவோம் என்று பேசத்தொடங்கியுள்ளனர்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் முன் மொழிந்த இந்த கருத்தை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், வழிமொழிய இப்பொழுது சோனியாகாந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேலும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ஏன் மூன்றாவது அணி கோஷம்
மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று மேடைக்கு மேடை பேசி வந்தாலும், ஆட்சி அமைக்கும் அளவிற்கு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கிடைக்காது என்பதை சோனியாவும், ராகுலும் உணர்ந்திருக்கின்றனர்.
ஆதரிக்காத கட்சிகள்
இடதுசாரிகள், அதிமுக, பிஜூ ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் தங்களுக்கு ஆட்சியமைக்க ஆதரவு கொடுக்காது என்பது காங்கிரஸ் தலைமைக்கு உறுதியாக தெரிந்த விசயம். எனவேதான் மூன்றாவது அணிக்கு ஆதரவு என்ற கோஷத்தை முன் வைத்து தற்போது பேச ஆரம்பித்திருக்கிறது.
தனித்து விடப்பட்ட காங்கிரஸ்
தமிழகம், ஆந்திரா, மேற்கு வங்கம் என பல மாநிலங்களில் காங்கிரஸ் தனித்து களம் காண்கிறது. எத்தனை சீட் கிடைக்கும் என்பது உறுதியில்லை. அதே சமயம் பாஜகவிற்கு தமிழகத்தில் வானவில் கூட்டணி, மகாராஷ்டிராவில் சிவசேனா, பீகாரில் ராம்விலாஸ் பஸ்வானின் லோக்சக்தி, ஆந்திராவில் தெலுங்குதேசம், உ.பி, ஒடிஷாவில் சிறு கட்சிகள், மேற்கு வங்கத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது.
சல்மான்குர்ஷித்
எனவேதான் லோக்சபா தேர்தல் முடிவுக்குப் பின், மத்தியில் 3வது அணி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரஸ் கட்சி பரிசீலனை செய்யும் என்று சில தினங்களுக்கு முன்பு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார். தேவைப்பட்டால், ஆட்சி அமைப்பதற்கு மூன்றாவது அணியிடம் இருந்து ஆதரவு பெறுவது பற்றியும் யோசிப்போம் என்றும் குர்ஷித் கூறியுள்ளார்.
ஜெய்ராம் ரமேஷ்
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கொள்கையின்படி மதச்சார்பற்ற கட்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு எப்போதும் தயாராக உள்ளோம். என்று மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். பாஜக உடன் தொடர்பு இல்லாத கட்சிகளுக்கு காங்கிரஸ் நிச்சயமாக ஆதரவு அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளியில் இருந்து ஆதரவு?
1996-ம் ஆண்டு அப்போதைய ஐக்கிய முன்னணி அரசுக்கு காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளித்தது. கடந்த 2004-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு இடதுசாரிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்தனர். ஆனால் அப்போதைய மத்திய அரசு பல்வேறு இடையூறுகளை சந்தித்தது.
ஆட்சியில் பங்கேற்கும்
இப்போதைய நிலையில் வெளியில் இருந்து ஆதரவளிப்பது ஏற்புடையதாக இருக்காது. காங்கிரஸ் கட்சி 3-வது அணி ஆட்சியில் காங்கிரஸ் பங்கேற்க வேண்டும் என்பதே எனது கருத்து. ஆட்சியில் அங்கம் வகித்தால் மட்டுமே அரசியல் ஸ்திரத்தன்மை இருக்கும் என்றும் உறுதிபட கூறியுள்ளார் ஜெய்ராம்ரமேஷ்.
அகமது படேல்
இதே மூன்றாவது அணி கோஷத்தை சோனியாகாந்தியின் அரசியல் ஆலோசகரும் முன்வைத்துள்ளார். மதசார்பற்ற ஆட்சி வரவேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் விருப்பம் அதற்காக காங்கிரஸ் கட்சி மூன்றாவது அணிக்கு ஆதரவு தரும் என்று கூறியுள்ளார்.
சிக்னல் கொடுப்பது யாருக்கு
இப்படி சிக்னல் கொடுப்பது பாஜக அணியின் பக்கம் வேறு கட்சிகள் சாய்ந்துவிடாமல் இருப்பதற்குத்தான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். 3வது அணியுடன் இணைந்தாவது ஆட்சியைத் தக்க வைக்கலாம் என அவர்கள் பேசி வருவது சிறுபான்மையினருக்கு விடுக்கப்பட்ட சிக்னல் என்றும் கூறுகின்றனர்.
மீண்டும் ஆட்சிக்கட்டிலில்
ஏனென்றால் 3வது அணி ஆட்சி அமைப்பதற்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தால் அது நிலையாக இருக்காது என்பதை அவர்கள் உணர்ந்துதான் இருக்கிறார்கள். கடந்த 1990-91, 1996 ஆகிய ஆண்டுகளில் சந்திரசேகர், தேவகவுடா, குஜ்ரால் ஆகியோர் ஆட்சியமைக்க ஆதரவு அளித்தபோதிலும் அவை நீண்டநாள் நீடிக்கவில்லை. எனவே, புதிய கட்சிகளின் ஆதரவை பெற்று தாங்களே ஆட்சியமைக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் விருப்பம். அதற்குத்தான் இப்போதே தூண்டிலை வீச ஆரம்பித்துவிட்டனர். எந்த மீன் சிக்குமோ தெரியவில்லை.