எங்களுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தர வேண்டும்- சோனி்யா
டெல்லி: காங்கிரஸ் கட்சிக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஒதுக்க வேண்டும். காங்கிரஸுக்கு மட்டுமே எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோர உரிமை உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாங்கள்தான் தனிப் பெரும் எதிர்க் கட்சி. எனவே எங்களுக்கே இந்தப் பதவியை வகிக்கும் உரிமையும், முறையும் உள்ளது என்றார் சோனியா.
அதேசமயம், இதற்காக நீதிமன்றத்தை நாடும் திட்டம் உள்ளதா என்பது குறித்து சோனியா பதிலளிக்க மறுத்து விட்டார்.
காங்கிரஸ் கட்சிக்கு லோக்சபாவில் 44 உறுப்பினர்களே உள்ளனர். பாஜகவுக்கு அடுத்து அதிக இடங்களை வைத்துள்ள கட்சி இதுதான். ஆனால் 55 உறுப்பினர்கள் இருந்தால்தான் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தங்களுக்கு 60 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் காங்கிரஸுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தர வேண்டும் என்று காங்கிரஸ் கோரி வருகிறது.
அதேசமயம், 3வது பெரிய கட்சியான அதிமுக, 4வது கட்சியான திரினமூல் காங்கிரஸ் ஆகியவை ஒருங்கிணைந்து கூட்டாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற முயற்சித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது லோக்சபாவில் மட்டுமே பாஜக பெரும்பான்மையுடன் உள்ளது. ராஜ்யசபாவில் இல்லை. சட்ட மசோதாக்களை சிக்கலின்றி நிறைவேற்ற ராஜ்யசபாவில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு அதற்குத் தேவை. எனவே காங்கிரஸுக்கே லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பாஜக வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.