அருணாச்சல் பிரதேசத்தை சர்ச்சைக்குரிய பகுதியாக்கிய 'குஜராத் அரசு'... புது பஞ்சாயத்து!
அகமதாபாத்: அருணாச்சல் பிரதேசம் மாநிலத்தை சர்ச்சைக்குரிய பகுதியாக குஜராத் அரசு வெளியிட்ட வரைபடத்தில் இருப்பதாக புது பஞ்சாயத்து கிளம்பியுள்ளது.
குஜராத்தில் கடந்த வாரம் சீனா அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி முன்னிலையில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அப்போது செய்தியாளர்களிடம் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.ஜே. பாண்டியன் பேசுகையில் கொடுக்கப்பட்ட வரைபடங்களில் அருணாச்சல் பிரதேசம் சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்ததாம்.
இதுதான் இப்போது புதிய பஞ்சாயத்தாக வெடித்துள்ளது. இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோத்வாடியா, கடந்த ஐமு ஆட்சிக் காலத்தில் அருணாச்சல் பிரதேச விவகாரத்தில் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த மோடி, தற்போது இந்த வரைபடம் குறித்து விளக்கம் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால் குஜராத் அரசோ இந்த வரைபடத்தை அங்கீகரிக்கவில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளது.