மோடி அரசின் 2-ஆம் ஆண்டு விழாவில் அமிதாப் பச்சன் பங்கேற்பதால் சர்ச்சை
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 2-ம் ஆண்டு வெற்றி விழாவை நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்க இருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 2-ம் ஆண்டு நிறைவு விழா டெல்லியில் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இந்த விழாவினை நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குவதாக செய்திகள் வெளியாகின.

அந்த நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்குவதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் கருப்புப் பணம் வைத்திருப்போரின் பட்டியலில் அதாவது பனாமா ரகசிய ஆவணங்களில் அமிதாப்பச்சனின் பெயர் இடம்பெற்றிருப்பதால் அதுதொடர்பான விசாரணை நேர்மையாக இருக்குமா? என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலளித்து அமிதாப் பச்சன் கூறுகையில், அந்த விழாவை நடிகர் ஆர்.மாதவன்தான் தொகுத்து வழங்குகிறார். மத்திய அரசின் பெண் குழந்தைகளைக் காப்போம் என்ற திட்டம் பற்றிய நிகழ்ச்சியில் மட்டும் நான் பங்கேற்கிறேன் என்றார்.
இந்நிலையில், அமிதாப் பச்சனுக்கு பாஜக மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் சதானந்தா கவுடா கூறுகையில், மத்திய அரசின் விழாவில் அமிதாப் பச்சன் பங்கேற்பதற்கும், கருப்புப் பணம் தொடர்பான அவர் மீதான விசாரணைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. பனாமா ஆவணம் தொடர்பான புகாரை, சுதந்திரமான புலனாய்வு அமைப்பு விசாரிக்கும் என்றார்.
இதேபோல், மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா, பாஜக செயலர் ஸ்ரீகாந்த் சர்மா, பாஜக எம்.பி. பரேஷ் ராவல் ஆகியோரும் அமிதாப் பச்சனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications