எங்கதானப்பா போனார் ராகுல்? எப்போதுதான் காங். தலைவராக மகுடம் சூட்டுவாங்க?
டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்னமும் டெல்லி திரும்பாததால் அடுத்த மாதம் காங்கிரஸ் கமிட்டியின் சிறப்புக் கூட்டம் நடைபெறுவது சந்தேகமே எனக் கூறப்படுகிறது. ராகுல் காந்தி அனேகமாக இந்த ஆண்டின் இறுதியில்தான் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படக் கூடும் என்றும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தல் தொடங்கி டெல்லி சட்டசபை தேர்தல் வரை காங்கிரஸ் அடிமேல் அடிவாங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் காங்கிரஸின் முகமாக கருதப்படுகிற அக்கட்சித் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் அறிவிக்கப்பட்டது. ஆனால் நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்காமல் 'லீவ்' எடுத்துக் கொண்டு ராகுல் ஓய்வெடுக்கப் போய்விட்டதாக கூறப்பட்டது. முதலில் 2 வாரம்தான் ராகுல் லீவில் போயிருக்கார் என காங்கிரசார் கூறிவந்தனர்.
ஆனால் ஒரு மாத காலமாகப் போகிறது....ராகுல் காந்தி எங்கே இருக்கிறார்? என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்ற எந்த ஒரு தகவலும் இல்லை. டெல்லியில் ராகுலை நம்பி நில ஆர்ஜித மசோதாவுக்கு எதிராக இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்த குவிந்தனர். ஆனால் ராகுல் காந்தி வராத நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர்களே அந்த போராட்டத்தை நடத்தினர்.
இந்நிலையில் மேலும் சில வாரங்களுக்கு ராகுல் காந்தியின் லீவ் நீட்டிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக இந்த மாத இறுதியில்தான் ராகுல் காந்தி டெல்லி திரும்பி 'அரசியலில்' மீண்டும் குதிப்பார் எனக் கூறப்படுகிறது.
அதனால் ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சிறப்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட இருக்கிறது. இந்த ஆண்டின் இறுதியில் அக்கூட்டம் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
அப்போதுதான் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்திக்கு மகுடம் சூட்டப்படும் என்கின்றனர் காங்கிரஸ் தலைவர்கள்.
இதனிடையே சோனியா மற்றும் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற வருகைப் பதிவும் அரசியல் வட்டாரங்களில் தீவிரமான விவாதத்துக்குள்ளாகியுள்ளது. சோனியா காந்தியைப் பொறுத்தவரையில் 2009-ல் 38%; 2010-ல் 26%; 2011-ல் 63%; 2012-ல் 45% 2013-ல் 30%; 2014-ல் 36% நாட்கள் வருகைப் பதிவு வைத்திருக்கிறார்.
அதே நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ் 2009 ஆம் ஆண்டு 95% வருகைப் பதிவு கொண்டிருந்தார்.
ஆனால் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்களில் ராகுல் காந்தியின் பங்கேற்பு என்பது மிக அதிகபட்சமாக இருந்து வந்தது.. நடப்பு கூட்டத் தொடரை தவிர...
2009ஆம் ஆண்டு 75%; 2010-ல் 30%; 2011-ல் 37%; 2012-ல் 66%; 2013-ல் 81% வருகைப் பதிவு வைத்திருந்தார் ராகுல். தற்போதைய கூட்டத் தொடரில் ஒருநாள் கூட ராகுல் கலந்து கொள்ளாமல் முட்டை % வாங்கி வைத்திருக்கிறார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்...