ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா அரசுக்கு வெளியில் இருந்து சப்போர்ட்? காங்கிரஸ் பிளான் என்ன..!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உமர் அப்துல்லா அரசுக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து சப்போர்ட் செய்யும் என்றும், அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம் கோராது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உமர் அப்துல்லாவுக்கு சுயேச்சை எம்எல்ஏக்கள் 4 பேர் ஆதரவு அளித்துள்ளதால், காங்கிரஸ் தயவு இல்லாமலே அந்த கட்சிக்கு ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைத்தது.
ஜம்மு காஷ்மீர் முதல்வராக இன்று உமர் அப்துல்லா பதவியேற்க உள்ளார். உமர் அப்துல்லா இன்று முதல்வராக பொறுப்பேற்க உள்ள நிலையில், அவரது அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய மாநாட்டு கட்சிக்கு சுயேட்சை எம்எல்.ஏக்கள் ஆதரவு கொடுத்ததால் காங்கிரஸ் ஆதரவு இல்லாமலே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது.

இதனால், ஆட்சியில் பங்கு பெறாமல் வெளியில் இருந்து ஆதரவு மட்டும் அளிக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே ஒதுக்க தேசிய மாநாட்டு கட்சி முன் வந்ததாகவும், ஆனால், இதற்கு காங்கிரஸ் கட்சி சம்மதம் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், அமைச்சரவையில் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.
அதேவேளையில், ஆட்சியில் பங்கு பெறாமல் இருப்பது ஒருவழியில் காங்கிரஸ் கட்சிக்கு, ஜம்மு காஷ்மீரில் கட்சியை வலுப்படுத்த உதவும் என அக்கட்சியினர் நம்புவதாகவும் சொல்லப்படுகிறது. இதனை எல்லாம் கணக்கு போட்டு தான் காங்கிரஸ் மேலிடம் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட இருந்த நிலையில், கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
90 சட்டமன்ற இடங்கள் கொண்ட காஷ்மீர் சட்டசபைக்கு நடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் தேசிய மாநாட்டு கட்சி - 42 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வென்றது. அங்கு ஆட்சி அமைக்க 46 எம்.எல்.ஏக்கள் தேவை என்கிற போது 48 எம்எல்ஏக்கள் ஆதரவு தேசிய மாநாட்டு கட்சிக்கு கிடைத்தது.
இதற்கிடையே தான் சுயேச்சை எம்எல்ஏக்கள் 4 பேர் தேசிய மாநாட்டு கட்சிக்கு ஆதரவு அளித்தனர். இதனால் மொத்த பலம் 52 ஆக அதிகரித்தது. இத்தகையை சூழலில் தான் காங்கிரஸ் தயவு இல்லாமலே ஆட்சி அமைக்கும் பலம் தேசிய மாநாட்டு கட்சிக்கு கிடைத்தது. இதனை தொடர்ந்து தான் காங்கிரஸ் அமைச்சரவையில் பங்கு கோராமல், வெளியில் இருந்து சப்போர்ட் செய்ய முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications