பிரதமர் வேட்பாளரைக் கேட்ட காங்கிரஸாருக்குக் கிடைத்தது 'சிலிண்டர்'தான்.. மோடி
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் டெல்லி கூட்டத்திற்கு வந்த காங்கிரஸார் கட்சித் தலைமையிடம் கேட்டது பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்கக் கோரித்தான். ஆனால் அவர்களுக்கோ மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கையை ஏற்றி அனுப்பி வைத்துள்ளது காங்கிரஸ் என்று கிண்டலடித்துள்ளார் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி.
டெல்லியில் 3 நாட்கள் நடந்த பாஜக தேர்தல் திட்டமிடல் மாநாட்டில் இன்று மோடி பேசினார். அவரது பேச்சிலிருந்து...
நாடு சுதந்திரமடைந்தது முதல் பல தேர்தல்களைப் பார்த்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு நடைபெறப் போகும் தேர்தல் அனைத்து விதத்திலும் வித்தியாசமானது.

இதுவரை இல்லாத அளவுக்கு நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது. ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுவரை இப்படி ஒரு ஊழல் கடலை நாடு பார்த்ததே இல்லை.
இது அரசை மாற்றப் போகும் தேர்தல் அல்ல, மாறாக நம்பிக்கை மற்றும் மாற்றத்திற்கான தேர்தலாகும்.
வாஜ்பாய் அரசு எந்த இடத்தில் இந்தியாவை வைத்திருந்ததோ, அந்த இடத்திற்கு மீண்டும் நாட்டை கொண்டு வரப் போகும் தேர்தல் இது.
அவர்கள் கட்சியைக் காப்பாற்ற நினைக்கிறார்கள். நாம் நாட்டைக் காக்க முயல்கிறோம். இதுதான் நமக்கும், அவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம்.
காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் நாடு முழுவதிலுமிருந்து நம்பிக்கையுடன் டெல்லி வந்திருந்தனர். காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் பெயரை அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். ஆனால் அவர்களை 3 சிலிண்டர் எக்ஸ்ட்ரா கொடுத்து அனுப்பி வைத்துள்ளது கட்சித் தலைமை.
பிரதமர் வேட்பாளரை அறிவிப்பது நமது பாரம்பரியமல்ல என்று காரணம் கூறப்பட்டுள்ளது. உண்மையா அது...?
மன்மோகன் சிங்கை யாரும் பிரதமராக தேர்வு செய்யவில்லை. சோனியா காந்தியைத்தான் தேர்வு செய்தனர். ஆனால் அவர்தான் மன்மோகன் சிங்கை நியமித்தார்.
பிரதமர் வேட்பாளரை நியமிக்காமல் அவர்கள் விட்டதற்கு பல அரசியல் காரணங்களைக் கூறுகிறார்கள். அத்தோடு நான் வேறு ஒரு காரணத்தையும் பார்க்கிறேன். தோல்வி உறுதி என்று வந்து விட்ட பிறகு, எந்தத் தாயாவது தனது மகனை தியாகம் செய்ய முன்வருவாரா...?
இன்று நாட்டில் டீ விற்பனையாளர்களுக்கு நல்ல மரியாதை கிடைத்து வருகிறது. இதற்காக காங்கிரஸுக்கு நாம் நன்றி சொல்வோம். டீ விற்பனையாளருக்கு எதிராக போட்டியிட அவர்கள் வெட்கப்படுகின்றனர். ஒரு சாதாரண டீ விற்பனையாளரைப் பார்த்து பயப்படுகின்றனர்.
மகன் டீ விற்றார், தாயார் எச்சில் பாத்திரங்களைக் கழுவினார். இப்படிப்பட்ட நபருடன் போட்டியிட அவர்கள் பயப்படுகின்றனர். பயந்துதானே ஆக வேண்டும்.
மக்கள் நாட்டின் விடுதலைக்காக உயிரையே தியாகம் செய்தனர். ஆனால் இன்று நல்லாட்சிக்காக தவித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால்தான் ஆயிரக்கணக்கானோர் பாஜகவில் வந்து இணைந்து கொண்டிருக்கின்றனர்.
மிகச் சாதாரனமானவனான எனக்கு பொறுப்பளித்த கட்சித் தலைமைக்கு இந்த நேரத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன். ஒரு டீக்கடைக்காரன் இந்தத் தேர்தலை சந்திக்கிறான் என்று மக்களிடம் போய் தைரியமாக சொல்லுங்கள் என்றார் மோடி.












Click it and Unblock the Notifications