காவிரியில் இருந்து தமிழகத்திற்கு டிச.15 வரை 2,000 கனஅடி தண்ணீர் திறக்க கோர்ட் உத்தரவு
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கர்நாடகம் 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: காவிரி வழக்கை விசாரிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கே உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. காவிரி நடுவர்மன்ற முடிவை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் இல்லை என்ற மத்திய அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007 பிப்ரவரி 5ம் தேதி இறுதித் தீர்ப்பை வழங்கியது. இதை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகா, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் இடைக்கால மனுக்களையும் தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்வ ராய், ஏ.என்.கான்வால்கர் ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த அக்டோபர் 18ம் தேதி விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி, காவிரி பாசனப்பகுதிகளில் ஆய்வு செய்த மத்திய உயர்நிலை தொழில்நுட்ப குழுவின் அறிக்கையை தாக்கல் செய்தார்.
அப்போது வாதிட்ட அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கிடையே பிரச்சினை நிலவியது. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக நாடாளுமன்றம் அனுபவம் வாய்ந்த நீதிபதியின் தலைமையில் காவிரி நடுவர் மன்றத்தை உருவாக்கியது. காவிரி விவகாரத்தை முழுமையாக ஆராய்ந்த நடுவர் மன்றம் கடந்த 2007ம் ஆண்டு இறுதித் தீர்ப்பை வழங்கியது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் செய்த மேல்முறை யீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்கக் கூடாது. இந்த மேல்முறை யீட்டு மனுக்கள் இந்திய அரசியல மைப்பு சட்டம் 262-ம் பிரிவு மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பங்கீடு சட்டம் 1956-க்கு எதிரானது.
நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை எதிர்க்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணையானது. இதேபோல காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு உத்தரவிட உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை ஏற்பதா மறுப்பதா என்பதை நாடாளுமன்றம்தான் முடிவெடுக்க முடியும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசே இறுதி முடிவை எடுக்க முடியும் என்று கூறினார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே,காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய பாதிக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் உள்ளது. இதில் மத்திய அரசின் வாதத்தை ஏற்க முடியாது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட வேண்டும். தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டர்.
வாதங்களை கேட்ட நீதிபதிகள், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரான மூன்று மாநில அரசுகளின் மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்பது குறித்து தொடர்ந்து விசாரிக்கப்படும் என்றனர்.
இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. காவிரி நடுவர்மன்ற முடிவை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு டிசம்பர் 15ம் தேதிவரை கர்நாடகம் 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
நடுவர்மன்ற முடிவை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. காவிரி வழக்குகள் மீது டிசம்பர் 15ம் தேதி பிற்பகலில் விசாரைண நடத்தப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.