கொரோனா வைரஸ்... இறந்த தந்தையின் உடல்... சைக்கிளில் 2 கி. மீ., எடுத்துச் சென்ற சோகம்!!
பெல்காவி: கர்நாடகா மாநிலத்தில் பெல்காவி மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்த முதியவரின் உடலை சைக்கிளில் இரண்டு கி. மீட்டர் தொலைவுக்கு மகன் எடுத்துச் சென்று அடக்கம் செய்து இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்துள்ளது. பெல்காவி மாவட்டத்தில் கிட்டூரில் இருக்கும் காந்திநகரில் 71 வயது முதியவர் இறந்து விட்டார். இவரது உடலை இங்கிருந்து முகுட் கான் ஹப்பள்ளி கிராமம் அருகே இருக்கும் இடுகாட்டுக்கு, அதாவது இரண்டு கி. மீட்டர் தொலைவுக்கு சைக்கிளில் அவரது மகன் எடுத்துச் சென்றுள்ளார்.
உள்ளூர் நிர்வாகிகள் இவரது உடலை எடுத்துச் செல்ல உதவாத காரணத்தால், சைக்கிளில் எடுத்துச் சென்றதாக அவரது மகன்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து காய்ச்சலில் இருந்த முதியவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, அவருக்கு காய்ச்சல் இருந்த காரணத்தினால், கொரோனா சிகிச்சை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். அதற்குள் சனிக்கிழமை இரவு இறந்துவிட்டார்.
இதையடுத்து கேள்விப்பட்ட அவரது உறவினர்களும் வர மறுத்துவிட்டனர். பஞ்சாயத்து மற்றும் சுகாதார துறைக்கு தகவல் கொடுத்தும் எந்த பதிலும் இல்லை. இதனால் முதியவரின் மகன் மற்றும் அவரது உறவினர் ஒருவரும் சைக்கிளில் எடுத்துச் சென்று புதைத்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி எய்ம்ஸ்...கொரோனா வார்டில் மீண்டும் அமித் ஷா...தீவிர சிகிச்சை!!
இந்த சம்பவத்துக்கு அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்து இருக்கும் செய்தியில், ''யார் இறந்தாலும், அவர்களை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும். இதுபற்றி அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.