"பிரைஸ் த லாட்" பாதிரியார் பிரான்கோ முலக்கல் மகிழ்ச்சி! "பண பலம் வென்றது.." கன்னியாஸ்திரிகள் கண்ணீர்
கோட்டயம்: கன்னியாஸ்திரி ஒருவர் கொடுத்த பாலியல் புகாரில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பாதிரியார் பிரான்கோ முலக்கல் நீதி வென்றது என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பண பலம் வென்று விட்டது. நீதி தோற்று விட்டது என்று கன்னியாஸ்திரிகள் வேதனையுடன் கூறியுள்ளனர்.
கேரள மாநிலத்தில் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஜலந்தர் மறை மாவட்ட பாதிரியாராக இருப்பவர் பிராங்கோ முலக்கல். இவர் மீது கோட்டயம் மாவட்டம், குருவிளங்காடு கான்வென்ட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார்.
அதாவது கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பணியாற்றிய போது 13 முறை பாதிரியார் பிரான்கோ முலக்கல் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த கன்னியாஸ்திரி புகாரில் கூறி இருந்தார்.

பாதிரியார் பிரான்கோ முலக்கல் விடுதலை
கன்னியாஸ்திரிகளின் கடும் போராட்டத்தை தொடர்ந்து 2018-ம் ஆண்டு பாதிரியார் பிரான்கோ முலக்கலை போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு அவர் ஜாமினில் வெளியே வந்த நிலையில் அவர் மீதான வழக்கு கோட்டயத்தில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி பாதிரியார் பிரான்கோ முலக்கலை விடுதலை செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்களைத் தாக்கல் செய்ய அரசுத் தரப்பு தவறியதால் விடுதலை செய்யப்படுவதாக கூறியது.

'பிரைஸ் த லாட்' 'நீதி வென்றது'
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த பாதிரியார் பிரான்கோ முலக்கல் 'நீதி வென்று விட்டது' 'பிரைஸ் த லாட்' என்று கூறி தனது ஆதரவாளர்களையும் வழக்கறிஞர்களையும் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். "பழம் தரும் மரங்கள் மட்டுமே கல்லால் அடிக்கப்படுகின்றன. அதற்காக நான் பெருமைப்படுகிறேன். இறைவனைத் துதியுங்கள்" என்று நீதிமன்றத்திற்கு வெளியே அவர் நிருபர்களிடம் கூறினார். இந்த தீர்ப்பை கேட்டதும் நீதிமன்றத்தின் வெளியே இருந்த பாதிரியாரின் ஆதரவாளர்கள் ஆனந்த கண்ணீர் விட்டனர்.

கன்னியாஸ்திரிகள் வேதனை
அதே வேளையில் கன்னியாஸ்திரிகள் தரப்புக்கு இந்த தீர்ப்பு மிகுந்த ஏமாற்றம் அளித்தது. நீதிமன்ற உத்தரவினால் அவர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். ''நீதிமன்றத்தில் இருந்து இதுபோன்ற தீர்ப்பு வந்ததை நாங்கள் இன்னும் நம்பவில்லை. நீதித்துறையிடமிருந்து எங்களுக்கு எதிர்பார்த்த நீதி கிடைக்கவில்லை. செல்வாக்கு மிக்கவர்களின் பலம், பண பலம் வென்று விட்டது'' என்று கூறியபடி அவர்கள் வேதனையுடன் கண்ணீர் சிந்தினார்கள்.

நீதி கிடைக்க சாகக் கூட தயார்
''நாங்கள் துறவற சபையில் தங்கியிருப்போம், எங்கள் சகோதரிக்கு நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டத்தை முன்னெடுப்போம். இந்த விவகாரத்தில் நீதி கிடைக்க சாகக் கூட தயாராக இருக்கிறேன்'' என்று கன்னியாஸ்திரி அனுபமா வேதனை வார்த்தைகளை கொட்டினார். ''எங்களை போன்ற சாதாரண மனிதர்கள் எந்த அநீதிக்கும் எதிராக மௌனத்தைக் கலைக்கக் கூடாது, வாழ்க்கையில் தங்களுக்கு என்ன நேர்ந்தாலும் அதை எதிர்த்துப் போராடக்கூடாது'' என்ற செய்தியை இந்தத் தீர்ப்பு தங்களுக்கு தருவதாக உடைந்த குரலில் அவர் கூறினார்.

பண பலம் வென்று விட்டது
செல்வம், செல்வாக்கு உள்ளவர்களால் இந்த சமூகத்தில் எதையும் செய்ய முடியும். அதைத்தான் இப்போது நம்மைச் சுற்றி பார்க்கிறோம். வழக்கு வாதம் நடக்கும் வரை நாங்கள் விசித்திரமாக எதையும் உணர்ந்ததில்லை. அதன் பிறகு எல்லாம் முடிந்து விட்டது என்றும் அவர் கூறினார். இதேபோல் கன்னியாஸ்திரியின் போராட்டத்தில் உடன் நின்ற புலனாய்வாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் '' இந்த தீர்ப்பு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இயற்கைக்கு மாறானது என்று கூறி தங்களின் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். பாதிரியார் பிரான்கோ பிரான்கோ முலக்கல் விடுதலைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்றும் அவர்கள் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications