‛‛கோமியம்’’ தீராத நோய்களுக்கு தீர்வு தரும்.. பசுவதை வழக்கில் குஜராத் நீதிபதி கருத்து.. முழுவிபரம்
காந்திநகர்: பசுவின் கோமியம் பல தீராத நோய்களை குணப்படுத்தும். வீடுகளில் மாட்டு சாணம் பயன்படுத்துவது கதிரியக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் என அறிவியல்பூர்வமாக நிரூபணம் ஆகி உள்ளது என்று குஜராத் மாநில செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி சமீர் வினோத் சந்திரா வியாஸ் கூறினார். பசு மாடுகள் கடத்தல் வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியபோது நீதிபதி இந்த கருத்துகளை கூறியதோடு பசுக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தினாலே உலகின் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பல மாநிலங்களில் பசுமாடுகள் கடத்தி வதைக்கப்படுகிறது. இதனை தடுக்க பாஜக ஆளும் மாநிலங்களில் பசு வதை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இருப்பினும் ஆங்காங்கே இறைச்சிக்காக பசுமாடுகள் கடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தகராறு, மோதல், கொலைகள் கூட நடந்துள்ளன.
வாட்டியெடுத்த தனிமை.. பொண்ணுக்கு வயசு 45.. மனமுருகிய மாப்பிள்ளை.. அம்மாவை நெகிழ வைத்த மகன்.. ஆஹா..!
பசுக்கள் கடத்தல்
இந்நிலையில் தான் கடந்த 2020 ஆகஸ்ட்டில் மகாராஷ்டிராவில் இருந்து குஜராத்துக்கு பசுமாடுகள் கடத்தப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் மாலேகான் நகரில் வசிக்கும் முகமது அமீன் என்பவர் லாரியில் 16 பசுக்கள் மற்றும் காளைகளை கொண்டு சென்றார். இதையடுத்து குஜராத் மாநிலம் தபி போலீசார் தடுத்து நிறுத்தி லாரியில் சோதனையிட்டனர். அப்போது கால்நடைகளுக்கு போதிய இடவசதி, உணவு வசதி இல்லாமல் சென்றது தெரியவந்தது. மேலும் ஒரு பசுமாடு இறந்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து முகமது அமீனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆயுள் தண்டனை
இதுதொடர்பான வழக்கு தாபி மாவட்டத்தில் உள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குஜராத்தில் பசு வதை தடுப்பு சட்டம் அமலில் உள்ளது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம். இந்நிலையில் தான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முகமது அமீன் குஜராத் விலங்குகள் பாதுகாப்புச் சட்டம், 2011, குஜராத் விலங்குகள் பாதுகாப்பு (திருத்தம்) சட்டம், 2017, மற்றும் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960 ஆகியவற்றின் கீழ் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்ததோடு, ஆயுள் தண்டனை விதித்தது.
நீதிபதி கூறியது என்ன?
இந்த வழக்கில் தாபி மாவட்ட நீதிமன்ற நீதிபதி சமீர் வினோத் சந்திரா வியாஸ் தீர்ப்பு வழங்கியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டுள்ள முகமது அமீனுக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி தனது உத்தரவின் பேரில் பல கருத்துக்களையும் தெரிவித்துள்ளார். பசுக்கள் குறித்தும், அதனை பாதுகாப்பதன் அம்சங்கள் குறித்தும் பல்வேறு விஷயங்களை நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அதில் சில முக்கிய பாயிண்டுகள் வருமாறு:
அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு
பசு ஒரு விலங்கு மட்டுமல்ல. தாயாகவும் உள்ளது. பசுவின் ரத்தம் பூமியில் துளியும் விழாமல் இருக்க வேண்டும். இது நடந்தால் பூமியின் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும். பசு பாதுகாப்பு பற்றி அடிக்கடி பேசினாலும் அது முறையாக செயல்படுத்தப்படவில்லை. பசு வதை மற்றும் பசு கடத்தல் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இது ஒரு நாகரீக சமுதாயத்திற்கு அவமானம். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், பசு வதை சம்பவங்கள் குறைந்து வருவதற்குப் பதிலாக அதிகரித்து வருவது வருத்தமளிக்கிறது.
கோமியம்.. சாணம்
பசு மதத்தின் சின்னமாக உள்ளது. பசுவை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளும் இயற்கை விவசாயத்தில் உற்பத்தியாகும் உணவு பொருட்கள் பல நோய்களில் இருந்து நம்மைக் காக்கிறது. பசுவின் கோமியம் பல தீராத நோய்களை குணப்படுத்தும். வீடுகளில் மாட்டு சாணம் பயன்படுத்துவது கதிரியக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் என அறிவியல்பூர்வமாக நிரூபணம் ஆகி உள்ளது. ஆனால் இன்றைய காலத்தில் இயந்திர இறைச்சி கூடங்களில் பசுக்கள் வெட்டப்படுகின்றன. இந்தியாவில் 75 சதவீத பசுக்கள் ஏற்கனவே காணாமல் போய்விட்ட நிலையில் சட்டவிரோதமாக பசுக்கள் கடத்தப்படுவதும், வெட்டப்படுவதும் வேதனையளிக்கிறது என தெரிவித்துள்ளார்.