பால் தேவைக்காக மாடு வாங்க சென்றவரை கொன்றுவிட்டார்கள்... பசு குண்டர்களால் கொல்லப்பட்டவரின் தாய் கதறல்
ராஜஸ்தானின் மாடுகளை கடத்தியதாக கொல்லப்பட்டவர் எந்த தவறும் செய்யவில்லை என்ற உண்மை வெளியாகி இருக்கிறது.
ஜெய்ப்பூர்: இரண்டு நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உமர் என்ற நபர் மாடுகளை கடத்தியதாக கூறப்பட்டு கொல்லப்பட்டார். இவர் பசு பாதுகாவலர்களால் கொடூரமாக தாக்கி கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் இவர் மாடுகளை கடத்தவே இல்லை என்ற உண்மை வெளியாகி இருக்கிறது. மேலும் குழந்தைகளின் பால் தேவைக்காக இவர் பசு மாடு வாங்கி சென்று இருக்கிறார்.
இந்த நிலையில் இறந்து இரண்டு நாட்களை ஆகியும் உமரின் கிராம மக்கள் அவரது உடலை வாங்க மறுத்து இருக்கின்றனர். மேலும் அவரது உடல் இன்னும் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் இருக்கிறது.
பசு மாடு வாங்க சென்றார்
ஜெய்ப்பூர் பகுதியில் இருக்கும் 'காத்மிகா' என்ற கிராமத்தை சேர்ந்த உமர் கான் என்ற நபர் இரண்டு நாட்களுக்கு முன் சொந்தமாக வளர்ப்பதற்க்காக பசு மாடு வாங்க சென்று இருக்கிறார். அவர்களது வீட்டில் குழந்தைகள் நிறைய பேர் இருப்பதால அடிக்கடி பால் தேவை ஏற்படுவதால் இவர் மாடு வாங்க சென்று இருக்கிறார். இதற்காக ஊரில் இருந்த நண்பர்களிடம் 15 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார். மேலும் மாடு வாங்குவதற்கு தன்னுடன் தன் தம்பிகள் இருவரையும் அழைத்து சென்று இருக்கிறார்.
அந்த இடத்திலேயே கொலை
உமர் மாடுகளை வாங்கி கொண்டு மதியம் வீட்டிற்கு திரும்பும் போது முகத்தை மறைத்து இருந்த நபர்கள் சிலரால் தாக்கப்பட்டார். மேலும் அவரது கை கால்களை கட்டி வேறு இடத்திற்கு தூக்கி சென்று இருக்கின்றனர். அவர் வைத்திருந்து மாடுகளை அந்த குழுவில் இருந்த வேறு ஒரு நபர் ஒட்டி சென்று இருக்கிறார். மேலும் உமரை கொடுமையாக தாக்கிய நபர்கள் அந்த இடத்திலேயே அவரை கொலை செய்து இருக்கின்றனர்.
கொலையை மறைக்க பிளான்
இந்த கொலையை மறைப்பதற்காக அந்த குழு நிறைய முயற்சிகளை செய்து இருக்கிறது. கிணற்றில் போடுவது, உடலை கொளுத்திவிடுவது என நிறைய யோசனைகளை செய்து இருக்கிறது. கடைசியில் இதை ஒரு விபத்து போல ஜோடிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி அவரையும் அவரது வண்டியையும் ரயில் தண்டவாளத்தில் போட்டுவிட்டு சென்று இருக்கின்றனர்.
உண்மைகளை கூறிய சகோதரன்
இந்த சம்பவம் யாருக்கும் தெரியாது என அந்த கொலை செய்த குழு நினைத்து இருக்கிறது. ஆனால் உமருடன் வந்த அவரது தம்பிகள் இருவரும் வீட்டிற்கு சென்று நடந்த அத்தனை விஷயங்களையும் கூறியிருக்கின்றனர். இவர்கள் மாடு வந்த அந்த வண்டியில் வராமல் அதற்கு அடுத்த வண்டியில் வந்ததால் கொலையில் இருந்து தப்பித்து இருக்கிறார்கள். இவர்களது சாட்சியத்தை தற்போது போலீசார் கேட்டு இருக்கின்றனர்.
பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது
இந்த நிலையில் ஜெய்ப்பூரில் இந்த பிரச்சனை மிகவும் பெரிதாக மாறியிருக்கிறது. இதனால் அந்த கிராமத்தில் கலவரம் ஏற்படும் சூழல் உருவாகி இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. மேலும் இதுவரை இந்த கொலையில் யாரும் கைது செய்யப்படாததால் உமரின் உடலை அவரது ஊர்காரர்கள் வாங்க மறுத்து இருக்கின்றனர்.