குஜராத் தேர்தல்.. “ஷாக்” ரிசல்ட்! உயர்ந்த “கிரிமினல் பேக்ரவுண்ட்” வேட்பாளர்கள்! முதலிடம் எந்த கட்சி?
காந்திநகர்: குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களில் 21 சதவீதம் பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்பது தெரியவந்து இருக்கிறது.
டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 2 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. டிசம்பர் 8 ஆம் தேதி குஜராத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 10க்கும் குறைவான நாட்களே உள்ளன.
89 தொகுதி யாருக்கு? பாயும் பாஜக.. விடாத காங்கிரஸ்-ஆம்ஆத்மி..குஜராத் முதற்கட்ட தேர்தல் நிலவரம் என்ன?
2 கட்ட தேர்தல்
இதனை அடுத்து மூன்று கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் குஜராத்தில் முகாமிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தில் 89 தொகுதிகளுக்கு முதல் கட்டமாகவும், 93 தொகுதிகளுக்கு 2 வது கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
குற்றப்பின்னணி வேட்பாளர்கள்
இதற்கான வேட்பாளர்களை மூன்று கட்சிகளும் அறிவித்துவிட்டன. முதல்கட்ட தேர்தலில் மூன்று கட்சிகள் மட்டுமின்றி சிறிய கட்சிகள், சுயேட்சைகள் என மொத்தம் 788 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இதில் 21 சதவீத வேட்பாளர்கள் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என ADR எனப்படும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் தெரிவித்து இருக்கிறது.
உயர்ந்த சதவீதம்
கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 15 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது இது அதிகரித்து உள்ளதாக அந்த அமைப்பு கூறி உள்ளது. இதில் அதிகளவிலான குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களின் வரிசையில் முதலிடத்தில் இருப்பது ஆம் ஆத்மி கட்சிதான். அந்த கட்சியை சேர்ந்த 36% பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள்.
பாஜகவுக்கு எந்த இடம்?
இதற்கு அடுத்த இடத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளது. அக்கட்சியை சேர்ந்த 35 சதவீதம் பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள். ஆளும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நிறுத்தப்பட்டு இருக்கும் வேட்பாளர்களில் 16 சதவீதம் பேருக்கு குற்றப்பின்னணி உள்ளது. ஆனால் கடந்த 2017 ஆம் ஆண்டு பாஜக 25 சதவீத குற்றப்பின்னணி வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தியது.
என்னென்ன குற்றங்கள்?
மாநில கட்சிகளை எடுத்துக்கொண்டால் பாரதிய பழங்குடியினர் கட்சியில் 29 சதவீதம் பேருக்கு குற்றப்பின்னணி உள்ளது. ஆனால், கடந்த 2017 ஆம் ஆண்டு இதே கட்சி வேட்பாளர்களில் 67 பேர் குற்றப்பின்னணி கொண்டவர்களாக இருந்தார்கள். அனைத்து கட்சி வேட்பாளர்களில் 9 பேர் மீது பெண்களுக்கு எதிரான கிரிமினல் குற்றங்களும், 3 வேட்பாளர்கள் மீது கொலை குற்றங்கள், 12 பேர் மீது கொலை முயற்சி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.