காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற பூனம் யாதவ் மீது வாரணாசியில் கல் வீசி தாக்குதல்
காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற இந்தியாவின் பூனம் யாதவ் மீது வாரணாசியில் சிலர் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர்.
வாரணாசி: காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற இந்தியாவின் பூனம் யாதவ் மீது நிலத்தகராறு காரணமாக வாரணாசி வந்த அவர் மீது மர்ம நபர்கள் சிலர் செங்கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்று வருகின்றன.
இந்த போட்டியில் பெண்களுக்காகன 69 கிலோ பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் பூனம் யாதவ் தங்க பதக்கத்தை வென்றார். இதையடுத்து உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள அவரது உறவினர்களை பார்ப்பதற்காக சனிக்கிழமை வந்திருந்தார்.
அப்போது அங்கிருந்த சிலர் அவர் மீது செங்கற்களையும், கற்களையும் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் பூனம் யாதவ் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். அப்போது மர்மநபர்களின் தாக்குதலை தடுக்க சென்ற பூனம் யாதவின் தந்தை, மாமா உள்ளிட்ட உறவினர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது.
இதையடுத்து அந்த மாநிலத்தின் அவசர போலீஸ் எண் 100-ஐ பூனம் யாதவ் தொடர்பு கொண்டார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் அவரை பத்திரமாக மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அங்கு போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.