குஜராத்தில் கொடூரம்! தலித் சிறுமி உயிரோடு எரித்துக் கொலை!!
அகமதாபாத்: உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் 15வயது தலித் சிறுமியை மர்ம நபர்கள் உயிரோடு எரித்துக் கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் தலித் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்படுவது, உயிரோடு எரிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதேபோல் மத்திய பிரதேசத்திலும் தலித்துகளுக்கு எதிராக சம்பவங்கள் அதிர வைத்துக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் குஜராத்தில் தலித் சிறுமி உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. குஜராத்தின் சுரேந்தர்நகர் மாவட்டத்தில் சய்லா நகரில் இருக்கிறது அம்பேத்கர் நகர். அப்பகுதியில் 15 வயது தலித் சிறுமி ஒருவர் சாக்கடையை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மோதிபாய் சுனேரா என்பவர் தலைமையிலான 8 பேர் கொண்ட கும்பல் அந்த சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளது. இதை அப்பெண் மிகக் கடுமையாக எதிர்த்து போராடியிருக்கிறார்.
அந்த நேரத்தில் வன்முறை கும்பல் திடீரென சிறுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்தது. படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்று தெரிய வந்தும் இன்னமும் அவர்களை போலீசார் கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது.