நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் மும்பை ஹோட்டல் ரூ. 4.28 கோடிக்கு ஏலம் !
மும்பை: மும்பை நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமின் சொத்துக்கள் இன்று ஏலம் விடப்பட்டன. அதில், தாவூத்தின் மும்பை நானக் அப்ரோஸ் ஹோட்டல் ரூ.4.28 கோடிக்கு ஏலம் போனது.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் ரயில்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். குண்டு வெடிப்புக்கு முன்பே தாவூத் இப்ராகிம் வெளிநாடு தப்பி விட்டார். பாகிஸ்தானில் கராச்சி நகரில் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்தின் பாதுகாப்பில் இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் இதை மறுத்து வருகிறது.
இந்தநிலையில் மும்பையில் தாவூத் இப்ராகிமுக்கு சொந்தமான பல கோடி மதிப்பிலான சொத்துக்களை ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததையடுத்து மும்பையில் தாவூத் இப்ராகிமின் சொத்துக்கள் இன்று ஏலம் விடப்பட்டது. தெற்கு மும்பையில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்த ஏலம் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் மும்பையில் உள்ள நானக் அப்ரோஸ் உணவகம் ரூ.4.28 கோடிக்கு ஏலம் போனது. இதை முன்னாள் பத்திரிகையாளரும் தன்னார்வ தொண்டு அமைப்பை நடத்துபவருமான பாலகிருஷ்ணன் ஏலத்தில் எடுத்தார். இப்ராகிமின் 15 ஆண்டு பழமையான ஹூண்டாய் அசன்ட் கார் அடிப்படை விலையான 4000 ரூபாய்க்கு ஏலம் போனது. இன்று நடந்த ஏலத்தில் மொத்தமாக இப்ராகிமின் 7 சொத்துகள் ஏலத்தில் விடப்பட்டன.
முன்னதாக தாவூத் தரப்பில் இருந்து அவரது கூட்டாளி சோட்டா ஷகீல் என்பவரால் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக பாலக்கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஷகீலிடம் இருந்து தனக்கு எஸ்.எம்.எஸ் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.