பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை - மத்தியபிரதேச முதல்வர் அதிரடி!
மத்திய பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையும் குற்றங்களும் அதிகரித்து வருகிறது.
போபால்: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளில் ஈடுபவர்களைத் தண்டிக்க, அவர்களைத் தூக்குத் தண்டனை அளிக்க சட்டம் இயற்றப்படும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
மத்தியபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள் பெருகி வருவதாக அங்கு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. 2015ஆம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான 4319 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிவருவதை உணர்ந்த மாநில அரசு, இதனைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வந்தது. அதனையடுத்து, முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குவோருக்கு தூக்குத் தண்டனை கிடைக்கும் வகையில் சட்ட மசோதா குளிர்கால கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும். அதனையடுத்து, அம்மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
ஒரு மாநிலமும் நாடும் மேம்பட வேண்டுமானால், அங்கு சட்டம் ஒழுங்கு சீராகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும். அதைக் கொண்டு வருவது போலீஸாரின் கடமை என்றும் பெண்களை கிண்டல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.