அம்ரித்பால் சரணடைந்தாரா? பஞ்சாப் போலீஸ் துப்பாக்கி முனையில் வளைத்து கைது செய்ததா? நடந்தது என்ன?
அமிர்தசரஸ்: காலிஸ்தான் பயங்கரவாதி அம்ரித்பால் சிக்கிய விவகாரத்தில் பல்வேறு முரண்பட்ட கருத்துகள், விவாதங்கள் நடந்து வருகின்றன. பஞ்சாப் போலீசாரால் அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டார் என அம்மாநில அரசு கூறுகிறது; ஆனால் சரணடைய வைத்தோம் என அகாலிதளம் நிர்வாகிகள் வாதிடுகின்றனர்.
பஞ்சாப் தனிநாடு கோரும் காலிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அம்ரித்பால் சிங். இவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் சுமார் 16 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அமிர்த்பால் சிங்கை கடந்த ஒரு மாதமாக பஞ்சாப் போலீசார் தேடி வருகின்றனர். தமது உருவம், உடையை மாற்றிக் கொண்டு பல்வேறு வாகனங்களில் பஞ்சாப் மாநிலம் முழுவதும் ஓடிக் கொண்டே இருந்தார் அம்ரித்பால் சிங்.

அம்ரித்பால்சிங்குக்கு உதவியவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் அம்ரித்பால் சிங் சிக்கவே இல்லை. இந்த நிலையில்தான் காலிஸ்தான் பயங்கரவாதிகள் இயக்கத் தலைவனாகிய பிந்தரன் வாலே பிறந்த ஊரான ரொட் அல்லது ரோட் கிராமத்தில் அம்ரித்பால்சிங் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
தற்போது அம்ரித்பால் கைது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. அதாவது அம்ரித்பால் சிங்கை ரொட் கிராமத்தில் போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்தனர்; ஒரு துப்பாக்கி தோட்டா கூட பயன்படுத்தாமல் லாவகமாக அம்ரித்பால் சிங்கை கைது செய்துவிட்டோம் என பெருமிதம் பேசுகின்றனர் பஞ்சாப் போலீஸ். ஆளும் ஆம் ஆத்மி அரசு தலைவர்களும் இதே கருத்தை முன்வைத்து பேசி வருகின்றனர்.
ஆனால் சிரோமணி அகாலி தளம் கட்சியோ இதில் மாறுபடுகிறது. அம்ரித்பால்சிங் ரொட் கிராமத்துக்கு வருவதாக எங்களிடம்தான் தெரிவித்தார்; அவர் போலீசில் சரணடைய விரும்புவதாகவும் கூறினார். இதனையே நாங்கள் போலீசுக்கு தெரிவித்தோம். இதனடிப்படையில்தான் ரொட் கிராமத்தை போலீஸ் சுற்றி வளைத்தது. உண்மையில் போலீசிடல் அம்ரித்பால்சிங் கைது செய்யப்படவில்லை; சரணடைந்தார். இதற்கு நாங்கள்தான் உதவி செய்தோம் என்கின்றனர். இப்போது பஞ்சாப் அரசியலில் இதுதான் அனலடிக்கும் வாதமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications