விஜய் மல்லையா செப்டம்பர் 9ல் நேரில் ஆஜராக வேண்டும்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு
டெல்லி: பணமோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட விஜய் மல்லையா செப்டம்பர் 9-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கடன் வழங்கிய வங்கிகள் இணைந்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன.

முன்னதாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து அமலாக்கத்துறை மல்லையாவுக்கு நிரந்தர விலக்கு அளித்து இருந்தது. இந்த விலக்கை ரத்து செய்வதாக அமலாக்கத்துறை தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு செய்து இருந்தது. இதையடுத்து, செப்டம்பர் 9-ம் தேதி நேரில் ஆஜராக மாஜிஸ்திரேட் ஸ்மித் தாஸ் நேற்று உத்தரவிட்டார்.
கடந்த 1996, 1997 மற்றும் 1998ஆம் ஆண்டுகளில் லண்டனில் நடந்த பார்முலா ஒன் உலக சாம்பியன் போட்டியின்போது கிங்க்பிஷர் லோகோவை விளம்பரப்படுத்த பிரிட்டன் நிறுவனம் ஒன்றுக்கு மல்லையா 2,00,000 டாலர் நிதியை வழங்கி இருந்தார்.
இது அந்நிய செலாவணி சட்டத்திற்கு எதிரானது என்றும், இந்திய ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறவில்லை என்றும் மல்லையா மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு நேற்று மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது மேற்குறிப்பிட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications