பலாத்காரத்துக்கெல்லாம் தூக்கா? முலாயம் கருத்துக்கு நிர்பயா பெற்றோர் கடும் கண்டனம்
டெல்லி: பலாத்காரம் செய்த இளைஞர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கக் கூடாது என்று கூறிய முலாயம் சிங்கின் கருத்துக்கு, டெல்லியில் ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாலியல் பலாத்கார குற்றத்துக்கு இளைஞர்களை தூக்கில் போடுவது தவறு' என சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கருத்து தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த கருத்துக்கு டெல்லியில் ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட இளம்பெண் நிர்பயாவின் பெற்றோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், பலாத்கார குற்றவாளிகளுக்கு ஆதரவாக முலாயம் சிங் பேசி உள்ளார். எனவே, அவரது கட்சி ஒரு மாநிலத்தை ஆளும் உரிமையை தார்மீகமாக இழந்துவிட்டது.
வரும் தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் இந்த பேச்சினை அடிப்படையாக வைத்து, பெண்களின் பாதுகாப்புக்கு உறுதி அளிக்கும் கட்சிகளுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.