கேஜ்ரிவால் அரசு பிறப்பித்த அத்தனை உத்தரவுகளும் ரத்து- டெல்லி ஆளுநர் நஜீப்ஜங் அதிரடி!!
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அரசு பிறப்பித்த அத்தனை உத்தரவுகளையும் ஆளுநர் நஜீப்சிங் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இதனால் ஆளுநர் நஜீப்சிங்- முதல்வர் கேஜ்ரிவால் இடையேயான மோதல் மிகவும் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
டெல்லி முதல்வர் கேஜ்ரில்வா, ஆளுநர் நஜீப்சிங் இடையேயான மோதல் போக்கை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அண்மையில் கண்டித்திருந்தார். ஆனாலும் இருவருக்கும் இடையேயான மோதல் முடிந்தபாடில்லை.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் தமது ஒப்புதலின்றி டெல்லி அரசு பிறப்பித்த அனைத்து உயரதிகாரிகள் பணியிடமாற்றல், நியமன உத்தரவுகளை துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் நேற்று அதிரடியாக ரத்து செய்தார்.
இதையடுத்து, டெலியில் சுதந்திரமாக ஆட்சி நடத்த ஒத்துழையுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடிதம் எழுதினார். இந்த மோதல் தொடருவதால் பெரும்பாலான அதிகாரிகள், டெல்லி அரசில் தொடர்ந்து நீடிக்க விருப்பமின்றி மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாக விருப்பம் தெரிவித்து, மத்திய பணியாளர் நலத் துறையிடம் விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், டெல்லி அரசியல் மட்டுமன்றி, அரசின் நிர்வாகத்திலும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டெல்லியில் அரசு நிர்வாகத்தை ஒழுங்குமுறைப்படுத்துவதாகக் கூறி, அனைத்துத் துறை உயரதிகாரிகள் கூட்டத்தை முதல்வர் கேஜரிவால் கூட்டினார். இக்கூட்டத்தில் துணைநிலை ஆளுநருக்குரிய அதிகாரம், முதல்வருக்குரிய அதிகாரம் போன்றவை தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் கேஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே டெல்லியில் நேற்று மாலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மூத்த அமைச்சர்கள் கூட்டத்திலும் டெல்லி அரசியல் நிலவரம் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கியதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போதைய நிலையில் மத்திய அரசு தலையிட்டால்தான் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.