"உயிருக்கு ஆபத்து"... சசிகலா புஷ்பாவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க டெல்லி ஹைகோர்ட் உத்தரவு
டெல்லி: எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே, எனக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சசிகலா புஷ்பா எம்.பி தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்க உத்தரவிட்டுள்ளது.
திருச்சி சிவாவின் கன்னத்தில் அறைந்த சசிகலா புஷ்பா எம்.பி, திங்கட்கிழமையன்று ராஜ்யசபாவில் பேசும் போது, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. என்னைக் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யச் சொல்கிறார்கள். எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே, எனக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கண்ணீர் விட்டார்.
அதிமுக அரசால், தமிழகத்தில் உள்ள என்னுடைய குடும்பத்தினருக்கும் ஆபத்து வரலாம் என்று கூறினார். இதைத் தொடர்ந்து, சசிகலா புஷ்பாவை அதிமுகவில் இருந்து நீக்குவதாகவும் கட்சி தலைமை அறிவித்தது.
பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று கூறிய சசிகலா புஷ்பா, தனக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி வியாழக்கிழமை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு விபரம்:
சென்னையில் அதிமுக தலைவரால் அறையப்பட்டது பற்றி ராஜ்யசபாவில் கடந்த 1ஆம் தேதி முறையிட்டேன். அச்சம்பவம் தொடர்பாக உடனடியாக நான் வசித்து வரும் நார்த் அவென்யூ பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. அதன்பேரில் ஒரேயொரு காவலர் மட்டும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளார்.
ராஜ்யசபாவில் முறையிட்ட அதே நாளில் திருநெல்வேலி மாவட்டம், உவரி கிராமத்தில் உள்ள எனது இல்லத்திலும் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், எனது கணவர், மகன் ஆகியோர் மீது போலியாக சில வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவற்றில் இருவரையும் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், எனது உயிருக்கு அச்சுறுத்தல் நீடிப்பதால், சுதந்திரமாக நாடாளுமன்ற கடமைகளை ஆற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், எனக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால், எனது பாதுகாப்பு அதிகரிக்கப்படவில்லை. எனவே, கூடுதல் பாதுகாப்பு வழங்க டெல்லி காவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனுவை இன்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், சசிகலா புஷ்பாவிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. நாடாளுமன்றம் சென்று வர சசிகலா புஷ்பாவிற்கு கூடுதல் பாதுகாப்பு தரவேண்டும் என்றும், இதுவரை அளிக்கப்பட்ட பாதுகாப்புகள் பற்றி மத்திய உள்துறை, டெல்லி மாநில காவல்துறை பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 15ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.