சுனந்தா கொலை வழக்கு... மெஹர் தராரிடமும் விசாரணை நடத்தப்படலாம்: டெல்லி போலீஸ் தகவல்
டெல்லி: சுனந்தா கொலை வழக்குத் தொடர்பாக தேவைப்பட்டால் மெஹர் தராரிடமும் விசாரணை நடத்தப்படும் என டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்தாண்டு டெல்லி ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டார்.
தனது கணவருக்கும், பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் மெஹர் தராருக்கும் தொடர்பு இருப்பதாக டுவிட்டரில் குற்றம் சாட்டிய சில தினங்களிலேயே மர்மமான முறையில் சுனந்தா மரணமடைந்தது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

முதலில் தற்கொலை எனக் கூறப்பட்ட சுனந்தாவின் மரணம் பின்னர் கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டது.
அக்குழுவினர் சசி தரூரின் உதவியாளர் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தினர். அதன் பின் விசாரணைக்கு ஆஜராகுமாறு சசி தரூருக்கு சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பியது. சசி தரூரும் சம்மனை பெற்றுக்கொண்டு புலனாய்வு குழு முன் ஆஜராகி 50-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் பின் முன்னாள் எம்.பி. அமர் சிங், சுனந்தாவின் மகன் ஷிவ் மேனன் ஆகியோர் விசாரணையில் பங்கேற்று போலீசாரின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். பின்னர் மீண்டும் சசிதரூரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் டெல்லி காவல் ஆணையர் பி.எஸ். பாஸ்சி. அப்போது அவர், ‘சுனந்தா வழக்கில் தேவையேற்பட்டால் மெஹர் தராரிடம் விசாரணை நடத்தப்படும்' என்றார்.
மேலும், அவருக்கும் இந்த வழக்கில் தொடர்பிருப்பதால் அவசியம் ஏற்படும் போது காவல்துறை தனது கேள்விகளை முன்வைக்கும் எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications