மோடி பதவியேற்பு.. 3000 விஐபிக்களை வரவேற்கத் தயாராகும் டெல்லி
டெல்லி: நரேந்திர மோடி பதவியேற்புக்காக 3000 விஐபி தலைவர்கள் டெல்லிக்கு வருகிறார்கள். ராஜபக்சேவும் இன்று டெல்லி வருகிறார். இவர்களை வரவேற்க டெல்லி ஆயத்தமாகி வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள முன் வளாகத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதில் மோடி பிரதமராக பதவியேற்கிறார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்கிறார்கள்.
சார்க் நாடுகளின் தலைவர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் என 3000 பேர் பங்கேற்கவுள்ளனர். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், மாலத்தீவு அதிபர் உள்பட சார்க் நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். ராஜபக்சேவும் இவர்களில் ஒருவராக கலந்து கொள்கிறார்.

மன்மோகன் சிங்
பிரமதர் பதவியிலிருந்து விடைபெறும் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் அமைச்சர்கள் பலரும் கூட இதில் கலந்து கொள்கின்றனர்.

மோடியின் தாயார்
மோடியின் தாயார் ஹீராபென்னும் கூட பதவியேற்பு விழாவில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நவாஸ் ஷெரீப்
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தவிர ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாஸ், பூடான் பிரதமர் ஷெரிங் டோப்காய், நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா, மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீ்ன் அப்துல் கயூம், ராஜபக்சே ஆகியோர் வெளிநாட்டுத் தலைவர்களாக இதில் கலந்து கொள்கின்றனர். வங்கதேசம் சார்பில் அதன் நாடாளுமன்ற சபாநாயகர் ஷிரின் செளத்ரி வருகிறார்.

இதுவே முதல் முறை
இந்தியப் பிரதமர் ஒருவரின் பதவியேற்புக்கு வெளிநாட்டுத் தலைவர்கள் அழைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

வாஜ்பாய் பிரதமராக பதவியேற்றபோதும்
வாஜ்பாய் பிரதமராக பதவியேற்றபோதும் குடியரசுத் தலைவர் மாளிகை முன் வளாகத்தில்தான் பதவியேற்றார். அவரது சிஷ்யரான மோடியும் அதே போலவே பதவியேற்கிறார். வழக்கமாக தர்பார் ஹாலில்தான் பதவியேற்பு விழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்புக்கு ஏவுகணைகள்
மோடி பதவியேற்புக்கு வெளிநாட்டுத் தலைவர்கள் வருகிறார்கள் என்பதாலும், பாஜகவுக்கு தீவிரவாத மிரட்டல்கள் இருப்பதாலும் பலத்த
பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடியரசு தின விழா அணிவகுப்பின்போது விமானங்களைத் தாக்கும் ஏவுகணைகள் நிறுத்தப்படும். அதேபோல இப்போதும் செய்யப்பட்டுள்ளது.

பல அடுக்கு பாதுகாப்பு
டெல்லி முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையிலும், வெளியிலும் கூட பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைச் சுற்றியுள்ள அனைத்து அலுவலகங்களும் 5 மணி நேரத்திற்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படை வான் வழியாக எதிரிகள் ஊடுறுவலைத் தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து உயரமான கட்டடங்களிலும் பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications