என் மகன் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவன்: டாக்சி டிரைவரின் தாய்
டெல்லி: தனது மகன் குற்றம் செய்துள்ளார் என்றும், அவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவர் என்றும் டெல்லியில் பலாத்கார வழக்கில் கைதான உபேர் டாக்சி டிரைவர் ஷிவ் குமார் யாதவின் தாய் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 25 வயது பெண்ணை தாக்கி, பலாத்காரம் செய்த வழக்கில் உபேர் டாக்சி டிரைவர் ஷிவ் குமார் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் போலீஸ் விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அதற்காக அவர் கொஞ்சமும் வருத்தப்படவில்லையாம்.

இந்நிலையில் யாதவின் செயலை அறிந்து உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மெய்ன்புரியில் வாழும் அவரது பெற்றோர் வேதனை அடைந்துள்ளனர். இது குறித்து யாதவின் தாய் கங்கா ஸ்ரீ கூறுகையில், என் மகன் தவறு செய்துள்ளார். அவர் அதற்காக நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.
தந்தை ராம்நாத் யாதவ் கூறுகையில், முன்பும் என் மகன் மீது சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டபோதிலும் எந்த வழக்கிலும் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றார்.
ஷிவ் குமார் யாதவ் மெய்ன்புரியில் பெண்களை கிண்டல் செய்து சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் விசாரணையில் யாதவ் கடந்த 2011ம் ஆண்டு தெற்கு டெல்லியில் உள்ள மெஹ்ராலி பகுதியில் பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி 7 மாதங்கள் சிறையில் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. பின்னர் அவர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
குற்றங்கள் செய்துள்ள யாதவுக்கு எந்த குற்றப் பின்னணியும் இல்லை என்று டெல்லி போலீசார் கடந்த ஆகஸ்ட் மாதம் நன்னடத்தை சான்றிதழ் அளித்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த சான்றிதழ் பொய் என்றும், தாங்கள் யாதவுக்கு எந்த சான்றிதழும் வழங்கவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து டெல்லியில் உபேர் டாக்சிகள் செயல்பட அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications