டெல்லி-வாரணாசி இடையே புல்லட் ரயில்... 782 கி.மீ- 2 மணி 40 நிமிடத்தில் செல்லலாம்
டெல்லி: நாட்டின் 2-வது அதிவேக புல்லட் ரயில் திட்டம் தலைநகர் டெல்லிக்கும், வாரணாசிக்கும் இடையே செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன், மும்பையில் இருந்து அகமதாபாத் நகருக்கு, அதிவேக புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தைத் தொடர்ந்து மேலும் 7 அதிவேக புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி - வாரணாசி இடையே புல்லட் வழித்தடம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த வழித்தடமானது அலிகார், ஆக்ரா, கான்பூர், லக்னோ, சுல்தான்பூர் ஆகிய நகரங்களை இணைக்கிறது. பிரதமர் மோடியின் நாடாளுமன்ற தொகுதியான வாரணாசியை மேம்படுத்தும் வகையில் இந்த புல்லட் ரயில் திட்டம் கொண்டு வரப்படவுள்ளது.
அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தற்போதே தனது செயல்பாட்டை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி - வாரணாசியை இணைக்கும் வழித்தடம் குறித்து, ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஆய்வு செய்து வருகிறது. டெல்லி - வாரணாசி இடையேயான 782 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது.
இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும்பட்சத்தில் 782 கிலோ மீட்டர் தொலைவை 2 மணி நேரம் 40 நிமிடத்தில் கடக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ 43 ஆயிரம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மும்பை - ஆமதாபாத் இடையே செயல்படுத்தப்பட உள்ள புல்லட் ரயில் சேவை 2023-ம் ஆண்டு துவங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.