உத்தரகாண்ட்டில் ஜனநாயகம் வென்றது... மோடிக்கு சரியான பாடம்: ராகுல்
டெல்லி: உத்தரகாண்ட்டில் ஜனாதிபதி ஆட்சி ரத்தானதன் மூலம் ஜனநாயகம் வென்றுள்ளது; பிரதமர் மோடிக்கு தக்க பாடம் புகட்டப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி காட்டமாக தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நேற்று காங்கிரஸின் ஹரிஷ் ராவத் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹரிஷ் ராவத் பெரும்பான்மையை நிரூபித்ததாக இன்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.

மத்திய அரசுக்கு பின்னடைவு
இதனைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட ஜனாதிபதி ஆட்சியை மத்திய அரசு வாபஸ் பெறுவதாக வேறுவழியில்லாமலே அறிவித்தது. இது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு கடுமையான பின்னடைவாகும்.

முதல்வராக ஹரீஷ்
உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பால் காங்கிரஸின் ஹரிஷ் ராவத் மீண்டும் உத்தரகாண்ட் முதல்வரானார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார். அவர் மேலும் கூறியதாவது:

ஜனநாயகம் வென்றது..
உத்தரகாண்ட் விவகாரத்தில் பா.ஜ.க. மிக மோசமான நடைமுறையை பின்பற்றியது. நாங்கள் அதை எதிர்த்து நின்றோம். இறுதியாக, உத்தரகாண்டில் ஜனநாயகம் வென்றது.

மோடிக்கு சரியான பாடம்
இந்திய மக்களும் நமது முன்னோர்களால் கட்டமைக்கப்பட்ட அரசியல் அமைப்புகளும் இத்தகைய ஜனநாயகப் படுகொலையை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள். இதில் இருந்து பிரதமர் மோடி சரியான பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.












Click it and Unblock the Notifications