ரூபாய்க்காக ஏங்கி ஏற்கனவே 33 பேர் பலி.. புது அறிவிப்பு எத்தனை பேரை காவு வாங்கப்போகிறதோ?
டெல்லி: ரூபாய் நோட்டு பிரச்சனையால் நாடு முழுவதும் உயிரிழப்புகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த நேரத்தில் வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுக்கு பதிலாக புதிய ரூபாயை பெறும் அளவு ரூ.2000 என குறைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தை சுரேஷ் சோனார் (40) நேற்று தன் மகள் திருமண நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக அவர் தன்னிடம் இருந்த செல்லாத நோட்டுகளை நேற்று முன்தினம் நீண்டநேரம் வரிசையில் நின்று வங்கியில் இருந்து மாற்றி எடுத்து வந்தார். இதில் உடல் சோர்வு அடைந்த அவர் இரவு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள வங்கியில் பணம் மாற்றுவதற்காக வரிசையில் காத்திருந்த 70 வயது முதியவர் ஒருவர் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் ராமச்சந்திர பஸ்வான் (70) ஓய்வூதியத்தை பெறவும், தன்னிடம் இருந்த பழைய நோட்டுகளை மாற்றவும் நேற்று அதிகாலை வங்கியில் நீண்ட வரிசையில் நின்றார். மூத்த குடிமக்களுக்கு தனியாக வரிசை இல்லாததால் பிற்பகல் 3 மணி வரை நின்ற அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அதே இடத்தில் மயங்கி விழுந்து இறந்தார்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா, சித்தூர் மாவட்டத்தில் பணத்தை மாற்றுவதற்காக நீண்ட வரிசையில் நின்ற விஜயலட்சுமி (72), ரத்னா (70) ஆகியோர் மாரடைப்பால் இறந்தனர். இதுவரை, நாடு முழுக்க 33 பேர் இப்படி உயிரிழப்பை சந்தித்துள்ளனர்.
இந்த நிலையில் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி புதிய ரூபாய் நோட்டுக்கள் பெறும் உச்சவரம்பு ரூ.4500லிருந்து ரூ.2000மாக குறைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என அரசு கூறினாலும், ஏடிஎம்கள் சரியாக செயல்படாத இந்த சூழலில், அடிக்கடி வங்கிக்கு சென்று பணம் எடுக்க வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்படும் என தெரிகிறது. ஏடிஎம்கள் சரி செய்யப்படவில்லை எனில், இன்னும் எத்தனை உயிரிழப்பை நாடு சந்திக்குமோ தெரியாது.












Click it and Unblock the Notifications