700 கி.மீ தூரம் மனித சங்கிலி.. ரூபாய் நோட்டு நடவடிக்கைக்கு எதிராக போராட்டம்..கேரள முதல்வர் பங்கேற்பு
திருவனந்தபுரம்: மத்திய அரசு கொண்டு வந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற நடவடிக்கையைக் கண்டித்து கேரளாவில் ஆளும் இடதுசாரி முன்னணி மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்தியது. இந்தப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 700 கி.மீ தூரத்தில் கைகளை கோர்த்து நின்று தங்களது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்தனர்.
கடந்த மாதம் 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்தியில் ஆளும் மோடி அரசு அறிவித்தது. அந்த கணத்தில் இருந்து மக்கள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர். தங்களிடம் உள்ள பணத்தை மாற்றுவதற்கே வங்கி வாசல்களிலும், அஞ்சலகங்களிலும் காத்துக்கிடந்தனர். அப்படிக் காத்துக் கிடக்கும் நேரத்தில் மட்டும் சுமார் 100 பேர் மயங்கி விழுந்து பலியாகி உள்ளனர்.
மோடியின், இந்த அறிவிப்பிற்கு கேரளாவில் ஆளும் சிபிம் தலைமையிலான இடது சாரி முன்னணி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், நேற்று பண மதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்த்து மனிதச் சங்கிலிப் போராட்டம் கேரளாவில் நடைபெற்றது. இதில், கேரள முதல்வர் பிரணராய் விஜயன், அமைச்சர்கள் உள்பட முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர்.
திருவனந்தபுரத்தில் தொடங்கிய மனிதச் சங்கிலி காசர்கோடு வரை 700 கி.மீ. தூரம் நீண்டு சென்றது. சுமார் 10 லட்சம் பேர் ஒன்றிணைந்து கைகோர்த்து பண மதிப்பு நீக்கத்திற்கும், அதனைக் கொண்டு வந்த பாஜக அரசிற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.