நாட்டின் நலனுக்காக துணிச்சலான நடவடிக்கையை எடுக்க அரசு தயங்கியது இல்லை- அருண் ஜெட்லி
ரூபாய் நோட்டு வாபஸ் மிக முக்கியமான நடவடிக்கை என்றும், நாட்டின் நலனுக்காக முக்கிய முடிவுகளை எடுக்க அரசு தயங்கியது இல்லை என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த பொருளாதார ஆசிரியர்கள் மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தது குறித்து பேசினார். பிரதமர் நரேந்திர மோடி கடினமான முடிவுகளை நிர்வாக ரீதியாக எடுத்துள்ளார் என்றும் தெரிவித்தார்.
புதிய ரூபாய் நோட்டுக்கள் மக்களுக்கு விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது என்றும் வரிவிதிப்பு முறையை மத்திய அரசு எளிதாக்கி வருகிறது என்றும் ஜெட்லி தெரிவித்துள்ளார். சிறிய அளவில் வங்கியில் பணம் செலுத்துவோரிடம் கணக்கு கேட்கப்படமாட்டாது என்று கூறிய அருண் ஜெட்லி, பெருந்தொகையை வங்கியில் செலுத்துவோரிடம் சட்டப்படி வரி பிடித்தம் செய்யப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
துணிச்சலான நடவடிக்கை
நாட்டு நலனுக்காக அரசு இந்த துணிச்சலான நடவடிக்கையை எடுத்துள்ளது. முடிவை எடுக்க மத்திய அரசு பயப்படவில்லை. ரூபாய் நோட்டு வாபஸ் மிக முக்கியமான நடவடிக்கை . அரசின் முடிவு எடுக்கும் ஆற்றலை நிலைநிறுத்துவது சவாலானது என்று கூறிய ஜெட்லி மக்களின் அவசர தேவைக்கான பணத்தேவையை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம் என்றார்.
கவலைப்பட வேண்டாம்:
அதிகளவில் கருப்பு பணம் வைத்துள்ளவர்கள் தான் கவலைப்பட வேண்டும். சில நாட்களுக்கு சிறிய தொகை செலவிடுபவர்களுக்கு பிரச்சினைகள் இருக்கலாம். போதிய அவகாசம் இருப்பதால் மக்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் கூறினார். தேவைக்கேற்ப வங்கிகளின் வேலை நேரத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பணத்தை மாற்றிக்கொள்ள வார இறுதி நாட்களிலும் வங்கி திறந்திருக்கும் என்றும் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
தயாராகவேண்டும்
சில நாட்கள் பணப்புழக்கத்தில் சிக்கல் இருக்கலாம் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தகவல் தெரிவித்துள்ளார். கணக்கில் வராத பணம் அரசின் நடவடிக்கையால் தனியாரிடம் இருந்து அரசுக்கு கிடைக்கும் என்றும் எதிர்கால நல்ல நிர்வாகத்துக்காக தற்காலிக இடையுறுக்கு நாம் தயாராக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.