டெல்லி குண்டு வெடிப்பு: புல்லரை தூக்கிலிட மாட்டோம்- சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்

காலிஸ்தான் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த புல்லரின் தூக்குத் தண்டனையை எதிர்த்து அவரது மனைவி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரியும், புல்லரின் மருத்துவ அறிக்கையை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டிருந்தார்.
இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், புல்லருக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற தடைவிதித்து கடந்த ஜனவரி 31ந் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில் இம்மனு தலைமை நீதிபதி பி. சதாசிவம் பெஞ்ச் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது புல்லரின் மனைவி அளித்துள்ள கருணை மனு பரிசீலனையில் உள்ளதாகவும், டெல்லி ஆளுநர் நஜீப் ஜங்கும் புல்லரின் தூக்குத் தண்டனையை குறைக்க பரிந்துரைத்துள்ளதாகவும் மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
புல்லரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரது தூக்குத் தண்டனையை நிறைவேற்ற மாட்டோம் என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேலும், புல்லரின் கருணை மனு மீது முடிவெடுக்க கால அவகாசம் வேண்டும் என்று வழக்கறிஞர் கேட்டார். அப்போது, இதுவரை முடிவெடுக்க முடியாமல் இருந்த மத்திய அரசின் நடவடிக்கையை குறை கூறிய நீதிபதிகள், இனியும் காலம் தாழ்த்தக் கூடாது என்று கண்டிப்புடன் கூறி, இரண்டு வார காலம் அவகாசம் அளித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணை மார்ச் 10ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications