ஜெ. மரணம் தொடர்பான விசாரணை கமிஷனில் சசிகலா நிரபராதி என தீர்ப்பு வரும்: தினகரன்
பெங்களூரு சிறையில் சசிகலாவை இன்று தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரு: ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷனில் சசிகலா நிரபராதி என தீர்ப்பு வரும் என்று அதிமுக (அம்மா) கட்சியின் துணை பொதுச்செயலர் தினகரன் கூறியுள்ளார்.
பெங்களூரு சிறையில் சசிகலாவை தினகரன் இன்று சந்தித்தார். இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தினகரன் கூறியதாவது:
சசிகலா என் சித்தி; கட்சி பொதுச்செயலர் என்பதால் சந்தித்தேன். இரட்டை இலை சின்னம் தொடர்பான தேர்தல் ஆணைய விசாரணை சரியான திசையில்தான் செல்கிறது.
அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கின்றனர். அதிமுகவின் கொறடாவே எங்கள் பக்கம்தான் உள்ளனர். ஓபிஎஸ் உள்ளிட்ட 12 பேரும் நிச்சயம் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷனில் சசிகலா நிரபராதி என தீர்ப்பு வரும். எங்கள் ஆதரவு ராஜ்யசபா எம்பிக்கள் 3 பேர் எந்த கொறடா உத்தரவையும் மீறாத நிலையில் அவர்களை தகுதி நீக்கம் செய்ய கோருவது அபத்தமானது.
இவ்வாறு தினகரன் கூறினார்.