மௌனவிரதம் அல்ல.. சத்தியத்தை மீறிய துரோகம்! - தினகரனைத் தவிக்கவிட்ட இரண்டரை மணி நேரம்
Recommended Video
பெங்களூர்: பரப்பன அக்ரஹாரா சிறையில் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக சசிகலாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருந்தாராம் தினகரன். அவரது எந்த சமாதானத்தையும் சசிகலா ஏற்கவில்லை.
'சத்தியம் வாங்கிக் கொண்டு கொடுத்த ஜெயலலிதா வீடியோக்களை வெளியிட்டுவிட்ட கோபம், அவரிடம் இருந்து விலகவில்லை' என்கின்றனர் இளவரசி குடும்பத்தினர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறைக்கு சசிகலா பயணமான நேரத்தில், விவேக் ஜெயராமனை அருகில் அழைத்தார். அவரது கையில் மெமரி கார்டுகளைக் கொடுத்து, ' பத்திரமா பார்த்துக்கப்பா...நான் கேட்கற வரைக்கும் இது உங்கிட்டயே பத்திரமாக இருக்கட்டும்' என ஜெயலலிதா சிகிக்சை வீடியோக்களைக் கொடுத்தார்.
வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ
இந்தக் காட்சிகளை அருகில் இருந்த ஜெயானந்த்தும் கவனித்துக் கொண்டிருந்தார். அதில் என்ன காட்சிகள் இடம்பெற்றிருந்தன என்பது சசிகலாவின் நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டுமே தெரிந்த தகவலாக இருந்தது. அதைப் பற்றி ஒருவரும் வெளியில் சொல்லிக் கொள்ளவில்லை. இந்நிலையில், ஆர்.கே.நகரில் கடைசி நேர நிலவரத்தை மாற்றும் முடிவில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான 20 விநாடி வீடியோ ஒன்றை வெளியிட்டார் வெற்றிவேல்.
இளவரசி குடும்பத்தில் புயல்
அரசியல் அரங்கில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் இந்தச் செய்தி பிரதான இடத்தைப் பிடித்தது. ' அம்மா மரணம் தொடர்பாக பரப்பப்படும் செய்திகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல்தான் இந்தக் காட்சிகளை வெளியிடுகிறேன்' என மிரள வைத்தார் வெற்றிவேல். இந்தக் காட்சிகளால் தினகரன்-இளவரசி குடும்பத்துக்குள்ளும் புயல் வீசியது.
கிருஷ்ண பிரியா பேட்டி
' வீடியோவைக் கொடுத்தது நாங்கள்தான்' எனப் பேட்டியளித்த கிருஷ்ணபிரியா, 'அம்மாவின் மரணம் சம்பந்தமாக விசாரணை கமிஷனோ, வேறு எந்தவிதமான விசாரணையோ அமைக்க வேண்டும் என்று பேசிவருகிறார்கள், அதனால் வீடியோவை ஒரு காப்பி எடுத்து தினகரனிடம் கொடுத்துவிடுங்கள். உரிய நேரத்தில் தேவைப்பட்டாலும் படலாம்' என்று சின்னம்மா எங்களிடம் கூறினார். எனவே, அந்த வீடியோவை ஒரு காப்பி எடுத்து தினகரனிடம் கொடுத்தார் விவேக்' என்றார்.
15 நாட்களுக்கு ஒருமுறை சந்திப்பு
தினகரனின் நம்பிக்கை துரோகம் பற்றி சசிகலாவிடம் விவரிப்பதற்காக, தனது உதவியாளர்களை அனுப்பி வைத்தார் விவேக். அவர்கள் யாரையும் சசிகலா சந்திக்கவில்லை. 15 நாட்களுக்கு ஒருமுறைதான் சிறையில் சந்திப்பு நடக்கும். சிறப்பு அனுமதி பெற்று சசிகலாவிடம் நடந்த சம்பவங்களை விவரித்துள்ளனர். ஜெயலலிதா வீடியோ வெளியான அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருக்கிறார் சசிகலா. இன்று சிறைக்குச் சென்று சந்தித்த தினகரனுக்கு உரிய மரியாதையை சசிகலா தரவில்லை.
பேசவில்லை
தன்னுடைய தரப்பு விளக்கத்தை இரண்டு மணி நேரத்துக்கு மேலாக எடுத்துரைத்தார். முகத்தில் எந்தவித ரியாக்சனையும் காட்டாமல் தினகரன் சொன்னதைக் கேட்டுக் கொண்டார். எந்த வார்த்தைகளும் பேசவில்லை. ' அம்மா நினைவுநாளில் இருந்து மவுன விரதம் இருந்து வருகிறார் சின்னம்மா' என அவர் கூறிய விளக்கத்தை இளவரசி குடும்பத்து உறவுகள் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.
தினகரன் மீது அதிருப்தி
"துணைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே, சசிகலாவுக்கு விரோதமான காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் தினகரன். அவருக்குக் கடிவாளம் போடுவதற்காகத்தான் விவேக்கிடம் கஜானா சாவியைக் கொடுத்தார் சசிகலா. தன்னைத்தானே வேட்பாளராக அறிவித்துக் கொண்டது; தொப்பி சின்னத்தில் போட்டியிட்டபோது சசிகலா பெயரை இருட்டடிப்பு செய்தது; கட்சியின் மூத்த நிர்வாகிகளை நீக்கியது எனப் பல விஷயங்களைச் செய்தார். தினகரனை நம்பி சில பொறுப்புகளை சசிகலா கொடுத்தார். எல்லாவற்றையும் சகித்துக் கொண்டவர், வீடியோ வெளியானதை ஏற்றுக் கொள்ளவில்லை.
அமைதியான சசிகலா
இரட்டை இலை வழக்கு, நிர்வாகிகள் நீக்கம், குடும்ப உறவுகளின் நேரடி பகை, வீடியோ வெளியானதற்கான காரணம் என அனைத்தையும் விரிவாக விளக்கியிருக்கிறார். அவர் சொல்வதை மட்டும் கேட்டுக் கொண்டார் சசிகலா. ' ஆர்.கே.நகர் வெற்றியைக் கொண்டாடுங்கள்' என சசிகலா கூறியதாக தகவல் வெளியானது. அப்படி அவர் எதையும் கூறவில்லை. நமக்குக் கிடைத்த வெற்றி என்ற அடிப்படையில் அமைதியாக இருந்துவிட்டார். வரக் கூடிய நாட்களில் தினகரன் நடந்து கொள்வதைப் பொறுத்து, சசிகலாவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும்" என்கின்றனர் மன்னார்குடி சொந்தங்கள்.