ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ம.பி. ”அகிலேஷ் யாதவ்" மகன் - 8 மணி நேர திக் திக் நிமிடங்கள்
போபால்: மத்திய பிரதேசத்தில் 30 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவனை 8 மணி நேரம் போராடி பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
மத்திய பிரதேச மாநிலம் நாராயண்பூர் பகுதியை சேர்ந்த அகிலேஷ் யாதவ் என்பவருக்கு 5 வயதில் திபேந்திரா யாதவ் என்ற மகன் உள்ளார். கிராமத்தில் உள்ள வயல் பகுதியில் அடிக்கடி விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்த சிறுவன் திபேந்திரா நேற்றும் அதேபோல் விளையாடி இருக்கிறார்.

இதனிடையே அந்த வயல்வெளியில் ஆழ்துளைக் கிணற்றுக்காக 30 அடி ஆழத்தில் குழி தோண்டி மூடப்படாமல் கிடந்தது. அதில் சிறுவன் திபேந்திரா தவறி விழுந்தான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கும் பேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த பேரிடர் மீட்புப் படையினர் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவனை மீட்க கடுமையாக போராடினார். அப்போது அங்கு மழை பெய்ததால் மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. தொடர் மழையையும் பொருட்படுத்தாமல் சிறுவனை மீட்பதையே குறிக்கோளாக கொண்டு பேரிடர் மீட்புப் படையினர் செயல்பட்டனர்.
சிறுவன் விழுந்த ஆழ்துளைக் கிணற்றின் அருகாமையில் 25 அடி ஆழத்திற்கு மற்றொரு துளையை இட்டு அதன் வழியாக பக்கவாட்டில் சிறுவன் சிக்கிய துணைக்கு மற்றொரு துணை போட்டு 8 மணி நேரம் போராட்டத்துக்கு பின்னர் பத்திரமாக சிறுவனை மீட்டனர். மீட்கப்பட்ட சிறுவன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications