அமித்ஷாவை 2வது முறையாக மண்ணை கவ்வ வைத்த டி.கே.சிவகுமார்! ரெட்டி சகோதரர்களே நடுங்கும் இவர் யார்?
Recommended Video
பெங்களூர்: அமித்ஷா மற்றும் ரெட்டி சகோதரர்கள் கூட்டணியின் பலே தந்திரங்களுக்கும், மிரட்டல்களுக்கும் எதிராக காங்கிரஸ் கட்சியின் சீனியர் தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவகுமாரிடம் 2வது முறையாக தோற்றுள்ளன.
அதிகார தோரணையுடன் கூடிய நடை, பார்வை, எகத்தாளமான பேச்சு, முன்னும் பின்னும் புழுதி பறக்கும் கார்களுடன் வரும் ஆதரவாளர்கள் இவையெல்லாம்தான் டி.கே.சிவகுமாரின் ஸ்டைல்.
கர்நாடகாவிற்கு மட்டுமே தெரிந்த இந்த ஒக்கலிக சமூகத்தை சேர்ந்த ஸ்ட்ராங் மேன், டி.கே.சிவகுமார் யார் என்பதை இந்தியாவே திரும்பி பார்த்தது கடந்த ஆண்டு நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலின்போதுதான். சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேலை குஜராத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது.
ஆனால், அகமது பட்டேலை தோற்கடிக்க எந்த எல்லைக்கும் செல்ல பாஜக தலைவர் அமித்ஷா திட்டமிட்டார். குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்களை அகமது பட்டேலுக்கு எதிராக வாக்களிக்க பாஜக வலை வீசியது. இதனால் கர்நாடகாவிற்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இங்கு, வந்த 44 குஜராத் எம்எல்ஏக்களை பாதுகாக்கும் பொறுப்பு டி.கே.சிவகுமாருக்கு வழங்கப்பட்டது. அவர் ரிசார்ட்டில் தங்க வைத்து பாதுகாத்தார். அகமது பட்டேல் அந்த தேர்தலில் வெற்றி பெற்றார். இதற்கு பரிசாக சிவகுமார் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. ஆனால் அவருக்கு எதிராக ஆதாரங்களை கைப்பற்றி நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
வலை வீசிய பாஜக
இதனிடையே, இப்போது எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு ஆதரவு திரட்ட காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களுக்கு பாஜக வலை வீசுவது உறுதியானதும், மீண்டும் சிவகுமாரையே நம்பியது காங்கிரஸ் தலைமை. மஜதவின் குமாரசாமி தனக்கு ஜென்ம பகை என்றபோதிலும், காங்கிரஸ் தலைமையின் உத்தரவுக்காக குமாரசாமியை முதல்வராக்கவும் தயாராக உழைத்தார் சிவகுமார்.
ஆபரேஷன் சக்சஸ்
சிவகுமார் பண பலம், அதிகார பலம் உள்ளவர். வட கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்கள் எப்படியோ அப்படித்தான் தென் கர்நாடகாவில் சிவகுமார் மற்றும் அவர் சகோதரரும் காங்கிரஸ் எம்பியுமான டி.கே.சுரேஷ். தனது சகோதரரின் மேற்பார்வையில் இம்முறையும் ஆபரேஷனை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார் டி.கே.சிவகுமார். மகாராஷ்டிராவில் விலாஷ் ராவ் தேஷ்முக் அரசுக்கு எதிராக 2006ல் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தபோதும் சிவகுமார்தான் மகாராஷ்டிரா காங். எம்எல்ஏக்களை பாதுகாத்தார்.
முயற்சி நடக்கவில்லை
காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களுக்கு பணம், பதவி கொடுத்து அழைப்பது, மிரட்டி பார்ப்பது என எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும், சிவகுமாரின் இரும்பு கோட்டைக்குள் நுழைய பாஜகவால் முடியவில்லை. அனைத்து எம்எல்ஏக்கள் போன்களையும் கூட பிடுங்கி வைத்திருந்தார் சிவகுமார். தனக்கு ஒதுக்கப்பட்ட கடமையை செய்ய எந்த அளவுக்கும் செல்ல கூடியவர் சிவகுமார்.
சிவகுமாருக்கு வெற்றி
ரெட்டி சகோதரர்களை பணத்தாலும், படை பலத்தாலும் எதிர்க்க சக்தி கொண்ட ஒரே காங்கிரஸ் தலைவர் சிவகுமார் மட்டுமே, என்பதால்தான் அவரை வளர்த்துவிடுகிறது காங்கிரஸ். இதை பயன்படுத்தி, குவாரி, ரியல் எஸ்டேட் பிசினசில் கொடி கட்டி பறக்கிறார் டி.கே.சிவகுமார். காங்கிரஸ் தலைமை பிரதி உபகாரமாக, அவருக்கே முக்கிய பொறுப்புகளை வழங்குகிறது. மீண்டும் ஒருமுறை, அமித்ஷா, ரெட்டி சகோதரர்கள் கூட்டணியை கர்நாடக மண்ணில் சாய்த்துக் காட்டியுள்ளார் டி.கே.சிவகுமார். எதையும் செய்ய முடியாமல் எடியூரப்பா பதவி விலகிவிட்டார். இத்தனைக்கும் சிவகுமாரும் பிசினஸ் மேன்தான் என்றபோதிலும், எந்த ரெய்டுக்கும் அஞ்சவில்லை. தமிழகம் உள்ளிட்ட தென் மாநில அரசியல் தலைவர்கள், டெல்லியில் இருந்து வரும் அடக்குமுறைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை கர்நாடகாவை சேர்ந்த இந்த ஸ்ட்ராங் மேனிடம் கற்றுக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.