ஆளும் கட்சிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் அமோக ஆதரவு ஏன்? தேர்தல் கமிஷனரிடம் திமுக திடுக் புகார்
டெல்லி: பதவி உயர்வுக்காக சசிகலா அணியினருக்கு ஆதரவாக செயல்படும் காவல் துறை ஆணையர் ஜார்ஜை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று திமுக எம்பிக்கள், தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
ஜெயலலிதா மறைவை அடுத்து ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இரட்டை இலை சின்னம், அதிமுக பொதுச் செயலாளர் விவகாரம் உள்ளிட்ட காரணங்களுக்கு ஓபிஎஸ் தரப்பும், சசிகலா தரப்பும் கடந்த 2 நாள்களாக டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்தனர்.

இந்நிலையில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தொடர்பாக திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இன்று டெல்லியில் நஜீம் ஜைதியை சந்தித்தனர்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர்கள் தெரிவிக்கையில், ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் ஒப்புகை சீட்டு அளிக்கும் நடைமுறையை செயல்படுத்த வேண்டும்.
ஆர்.கே. இடைத்தேர்தல் முடியும் வரை சென்னை காவல் துறை ஆணையர் ஜார்ஜை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். டிஜிபி பதவியை பெறுவதற்காக சசிகலா தரப்புக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று நஜீம் ஜைதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications