"குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாதீங்க".. பாஜக டீல் பேசியதாக அரவிந்த் கெஜ்ரிவால் பரபர!
அகமதாபாத்: குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தன்னை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்றும், அப்படி செய்தால் சத்யேந்திர ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்களை கைவிடுவதாக பாஜக தன்னிடம் டீல் பேசியதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அடுத்த மாதம் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
182 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட குஜராத்தில் பாஜக தொடர்ந்து 4-வது முறையாக ஆட்சி செய்து வருகிறது.

ஆம் ஆத்மியும் தீவிரம்
இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று 5-வது முறையாக ஆட்சியை பிடிக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனது வெற்றியை உறுதி செய்ய முடியும் என்று பாஜக நம்புகிறது. இதனால், தேர்தல் வேலைகளை முடுக்கி விட்டுள்ள பாஜக முழு வீச்சில் பணியாற்றி வருகிறது. இது ஒருபுறம் இருக்க ஆம் ஆத்மி கட்சியும் குஜராத் தேர்தல் களத்தில் இந்த முறை மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

பரபரக்கும் குஜராத் தேர்தல்
பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் குஜராத்திலும் களம் இறங்கியிருக்கும் ஆம் ஆத்மி, பல்வேறு வாக்குறுதிகள், இலவச திட்டங்களையும் அறிவித்துள்ளது. முதல்வர் வேட்பாளரையும் அறிவித்துள்ள ஆம் ஆத்மி, பிரசாரத்தை முன்பே தொடங்கிவிட்டது. இதனால், குஜரத்தில் இந்த முறை பாஜக , காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனை போட்டி நிலவும் என்று தெரிகிறது. இதனால், தேர்தல் களம் தற்போது தகிக்க தொடங்கியுள்ளது.

பாஜக என்னிடம் டீல் பேசியது
இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் பிரபல ஆங்கில தொலைக்காட்சியான என்.டி டிவி நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, குஜராத் தேர்தல் தொடர்பாக பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டார். குறிப்பாக குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று தன்னிடம் பாஜக டீல் பேசியதாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறியதாவது:-

பாஜக பயந்துவிட்டது
டெல்லி எம்.சி.டி தேர்தலிலும் குஜராத் சட்டமன்ற தேர்தலில் தோற்றுவிடுவோம் என பாஜக அஞ்சுகிறது. அதனால்தான் டெல்லி எம்.சி.டி தேர்தலை ஒரே நேரத்தில் பாஜக நடத்துகிறது. இரு இடங்களிலும் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை பாஜகவுக்கு இருந்தால் இப்படி ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருக்க மாட்டார்கள். பாஜக பயந்துவிட்டது என்பதே உண்மை.

அப்படி செய்தால்
குஜராத் மற்றும் டெல்லி எம்.சி.டி தேர்தல் என இரண்டிலும் தோற்றுவிடுவோம் என்ற அச்சம் அடைந்ததால்தான் ஒரே நேரத்தில் இரு தேர்தல்களையும் நடத்துகிறது. ஆம் ஆத்மியில் இருந்து விலக வேண்டும் என்ற ஆஃபரை மணிஷ் சிசோடியா நிராகரித்ததால், அவர்கள்(பாஜக) தற்போது என்னை தொடர்பு கொண்டுள்ளனர். குஜராத்தில் போட்டியிட வேண்டாம் என்றும் அப்படி செய்தால் சத்யேந்திர ஜெயின் மணிஷ் சிசோடியா ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுக்களை கைவிடுவதாக கூறினர்" என்றார்.

இறுதியில் மெசேஜ் மட்டுமே வரும்
அப்போது, உங்களுக்கு இந்த ஆஃபரை முன்வைத்தது யார்? என்று கெஜ்ரிவாலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கெஜ்ரிவால், பாஜக ஒருபோதும் நேரடியாக அணுகாது. அவர்கள் ஒவ்வொருத்தர் மூலமாக தொடர்பு கொண்டு இப்படி அணுகுவார்கள். இறுதியில் மெசேஜ் மட்டுமே நம்மை வந்து சேரும்" என்றார்.












Click it and Unblock the Notifications